ஆணாக மாறியவர் தாயான கதை!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜியா பவல் (வயது 21). ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை. அதே மாநிலத்தைச் சேர்ந்த ஜஹாத் (23) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர்.

இளம் பருவத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி வசித்து வந்த இவ்விருவரும் காதல் வயப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தனர்.

இவர்கள், மற்றவர்களைப்போல தாங்களும், தங்கள் பெயர் சொல்ல ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினர். இதனால் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றனர்.

பெண்ணாகப் பிறந்து ஆணாக ஜஹாத் மாறியபோதும், அவரது கருப்பை அகற்றப்படாததால் அவர் கருத்தரிப்பது சாத்தியம் எனக் கூறிய மருத்துவர்கள் அதற்குரிய ஆலோசனைகளை வழங்கினர்.

இந்த நிலையில் ஜஹாத் கர்ப்பம் தரித்தார். தொடர்ந்து மருத்துவ ஆலோசனையும் பெற்று வந்தார்.

இதனிடையெ சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாங்கள் பெற்றோராகப் போகிற தகவலை ஜியா பவல் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய ஜஹாத்துக்கு நேற்று காலை சுமார் 9.30 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.

இந்தத் தகவலை ஜியா பவல் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஜஹாத்தும், குழந்தையும் நலமாக உள்ளனர் எனப் பதிவிட்டுள்ள அவர், ஆனால் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை சொல்லவில்லை.

பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஒருவர் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக் கொண்டிருப்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like