ஆபத்தான பயணம்: மாணவர்கள் மீது புகாரளிக்கலாம்!

  • மாநகரப் போக்குவரத்துக் கழகம் உத்தரவு

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், ”மாநகரப் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யாதவாறு பேருந்துகளில் ஏறும் போதும், பயணம் செய்யும் போதும், பாதுகாப்பான விதிகளை கடைப்பிடிக்கச் செய்ய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான நெறிமுறைகள் ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தப்பட்ட நிலையில் ஒரு சில பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டு பயணம் தொடருவதால் மீண்டும் கீழ்க்கண்ட இயக்க நெறிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தப்படுகிறது.

வழித்தடங்களில் ஏதேனும் மாணவர்கள் படியில் தொங்க நேரிட்டாலோ அல்லது உயிருக்குப் பாதுகாப்பாற்ற முறையில் பயணிக்க முற்பட்டாலோ அந்த பேருந்தை நிறுத்தி படிக்கட்டு மற்றும் முறையற்ற பயணத்தைத் தவிர்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.

மாணவர்கள், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களின் அறிவுரையை கேட்காமல் மீறி செயல்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள்  பேருந்தை இடையூறு இல்லாமல் ஓரமாக நிறுத்தி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காவல் அவசர அழைப்பு 100 எண்ணுக்கோ மற்றும் மாநகரப் போக்குவரத்து வான்தந்தி பிரிவுக்கும் தகவல் தெரிவித்து புகார் அளித்திட வேண்டும்.

பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்வது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களின் பொறுப்பு என்பதனை உணர்ந்து பணிபுரிய வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. 

You might also like