படைப்பாளி தூங்கலாம், படைப்புகள் தூங்குவதில்லை!

இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் நினைவலைகள்:

அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் நினைவுகளை ‘மனம்கொத்திப் பறவை’ யில் எழுதியதை நினைத்து கண்ணீர்விடுவதை தவிர வேறுவழியெதுவும் தெரியவில்லை என்கிறார் பத்திரிகையாளர் பைம்பொழில் மீரான்.

‘பாரதி’ படம் பார்த்தபோது படத்தில் பாரதிக்கு அடுத்தபடியாக எனக்கு அதில் பிடித்தவர் குவளை கண்ணன்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அடுத்தவர்களுக்காகவே வாழ்கிற அந்த குவளை கண்ணன் கேரக்டரில் நடித்தவர் பங்காளி டி.பி.கஜேந்திரன். அந்த கேரக்டர் போலவே மற்றவர்களுக்காக வாழ்கிறவர்.

அண்ணன் தினத்தந்தி கங்காதரன் மூலம்தான் அவர் அறிமுகம். முதல் சந்திப்பிலேயே “வாங்க பங்காளி” என்று தோளில் கைபோட்டு உறவு கொண்டாடியவர்.

அன்று முதல் இன்று வரை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வாரத்தில் ஒரு முறையாவது சந்தித்து இரவு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். இப்போது அவர் டி.ஜி.பி நெஸ்ட் என்ற தங்கும் விடுதியை கட்டியிருக்கிறார். அதில் இந்தச் சந்திப்பு தொடர்கிறது.

அவரது குடும்ப பிரச்சினைகள், அந்தரங்க பிரச்சினைகள் அனைத்தையும் என்னோடு பகிர்ந்துகொள்வார். எனது குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் வந்து நிற்பார்.

என்னைப் போன்றே தினத்தந்தி கங்காதரன், முன்னாள் தினத்தந்தி நிருபர் பழனிகுமார், குமுதம் சித்ராமணி, மக்கள் தொடர்பாளர் மவுனம் ரவி, தினத்தந்தி முருகன், எழுத்தாளர் கடற்கரைய் என்று அவருக்கு ஒரு நட்பு வட்டாரமே இருக்கிறது.

பங்காளியின் பூர்வீகம் தூத்துக்குடி. அவரது உயரம் குறைவான தோற்றத்தை உலகம் கிண்டல் செய்தபோது அதையே பாசிட்டிவாக மாற்றி சினிமாவில் ஜெயித்தவர். பாலச்சந்தரிடம், விசுவிடம் சினிமா கற்று 25 படங்களை இயக்கினார்.

அதில் 20 படங்கள் வெற்றிப் படங்கள் 150 படங்களுக்குமேல் நடித்தும்விட்டார். அவரது படங்களில் குடும்ப பிரச்சினைகளின் அனைத்து வலிகளையும் தானே தாங்கிக் கொண்டு ஹீரோ தீர்த்து வைப்பார்.  டி.பி. கஜேந்திரன் என்கிற நிஜ ஹீரோவின் பிம்பம்தான் அது.

அவரது படங்கள் பெரிய கலைப் படைப்போ, அல்லது வசூலை அள்ளும் கமர்ஷியல் படமோ அல்ல. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்த மினிமம் கியாரண்டி படங்கள். தரமான குடும்ப படங்கள்.

டி.பி.கஜேந்திரனால் கெட்டவர்கள், நஷ்டம் அடைந்தவர்கள் எவருமில்லை. இப்படி ஒரு பெயரை சம்பாதிப்பது சினிமாவில் சிரமம். ரஜினி, கமலால் நஷ்டப்பட்டவர்களே நிறைய இருக்கிறார்கள்.

இன்றைக்கு சினிமாவில் பல சங்கங்களில் அவர் பொறுப்பில் இருக்கிறார். ஆனாலும் எந்த பொறுப்புக்கும் அவர் வாக்கு கேட்டுச் சென்றதில்லை. அவர் எந்த பொறுப்பில் நின்றாலும் “நம்ம கஜேந்திரன்” என்று அவருக்கு ஒரு ஓட்டை போட்டுவிடுவார்கள்.

அதற்கு காரணம் அவர் எல்லோரிடமும் பழகுகிற பாங்கு. இரண்டு படம் இயக்கி விட்டு வானத்தை பார்த்து நடக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் 25 படம் இயக்கி விட்டு அதுபற்றிய எந்த தலைக்கனமும் இல்லாமல் எளிமையாக இருப்பவர்.

உறவினர்கள் நண்பர்களுக்கு சத்தமின்றி உதவக்கூடியவர். தினமும் மாலையில் சினிமா வாய்ப்பு கிடைக்காத துணை நடிகர்கள், நடிகைகள் அவரைத் தேடி வருவார்கள்.

எங்கே வாய்ப்பு கிடைக்கும், என்ற தகவலைச் சொல்லி, அதை எப்படி பெற வேண்டும் என்கிற ஆலோசனையும் சொல்லி, அன்றைய செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்புவார்.

பொதுவாக சினிமா கலைஞர்கள் பத்திரிகையாளருடன் லாபம் கருதியே பழகுவார்கள். ஆனால் டி.பி.கஜேந்திரன் நண்பனாகி விட்டால் பத்திரிகையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நண்பனாகத்தான் பார்ப்பார்.

செய்திகள், விளம்பரங்களை கடந்த நட்பாக அது இருக்கும். உடல் நிலை காரணமாக நடிப்பதை குறைத்துக் கொண்டார். அவ்வப்போது அன்பு அழைப்புகளுக்காக சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இப்போது அவர் நம்மிடம் இல்லை.

அண்மையில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தபோது ஒரு பஸ்சின் பின்புறத்தில் ஒரு மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரம் பார்த்தேன்.

அதன் வாசகம் என்ன தெரியுமா, “நீங்கள் பட்ஜெட் பத்மநாபனா?, பந்தா பரமசிமா?”.

படைப்பாளி தூங்கலாம், படைப்புகள் தூங்குவதில்லை.

You might also like