ஈரோடு இடைத்தேர்தல்: தொடங்கியது வேட்புமனு தாக்கல்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி இன்று வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இன்று காலை 11 மணிக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கியது.

முதல்நாளான இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து சமூக ஆர்வலர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய சுயேட்சை வேட்பாளர்கள் வந்தனர்.

குறிப்பாக சேலம் மாவட்டத்தில் இருந்து பத்மராஜன், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நூர் முகமது, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரபாண்டி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் நூதன முறையில் வேட்ப்பு மனுவை தாக்கல் செய்ய வந்துள்ளார்.

இந்த வேட்பு மனு தாக்கலையொட்டி ஈரோடு மாநகராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தொடர்ச்சியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த வேட்பு மனு தாக்கல் ஈடுபடக்கூடிய 42 அலுவலர் நேரடியாகவும், வேட்பு மனு தாக்கல் செய்ய வரக்கூடிய வேட்பாளருக்கு உதவி செய்யும் வகையில் அங்கங்கு அலுவலர் கொண்ட குழு அமைத்துள்ளதாகவும், ஈரோடு மாநகராசி அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனு தாக்கல் 11 மணிக்கு தொடங்கிய நிலையில் ஒவ்வொரு நாள் மதியம் 3 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7-ம் தேதி இறுதி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்.8-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டு 10-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 3-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.

அமமுக கட்சி வேட்பாளர் சிவா பெர்சத், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேமுதிக கட்சி வேட்பாளர் ஆனந்த் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவித்த நிலையில், அதிமுக கட்சி சார்பில் ஒபிஸ், இபிஸ் இரு அணிகளும் வேட்பாளர்கள் இறுதி செய்யாத வகையில் வரக்கூடிய நாட்களில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், பிப்ரவரி 5 ஞாயிறு என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like