உகாண்டாவில் முடிவுக்கு வந்த எபோலா பரவல்!

– உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

உயிர்கொல்லி நோயாக அறியப்படும் எபோலா வைரஸ் பாதிப்பு கடந்த 2022 செப்டம்பர் மாதம் உகாண்டாவில் கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து வேகமாகப் பரவிவந்த இந்த நோய் பாதிப்பால் 164 பேர் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் 55 பேர் பலியாகினர். இந்த நோய்த் தொற்றால் நாடு முழுவதும் 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவக் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து எபோலா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை மீட்பதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டன.

தொடர் கண்காணிப்பு, தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் உகாண்டாவில் எபோலா வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், உகாண்டாவின் இந்த வெற்றி எதிர்காலத்தில் பிற நாடுகளுக்கு வழிகாட்டுதலாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

You might also like