மார்கழிப் பூவே – நனைய வைக்கும் ஒரு பாடல்!

மார்கழி பிறந்து குளிரும் அடிக்கத் தொடங்கிவிட்டது.

குளிரில் மிதமான சூட்டில் காபியோ, தேநீரோ ருசித்துக் கொடுப்பது மாதிரி சில பாடல்களைக் கேட்பதும் ரசனையான ஒன்று தான்.

இந்தச் சமயந்தில் மார்கழியை நினைவூட்டுகிற பாடல்களில் ஒன்று – 94 ஆம் ஆண்டு வெளியான  ‘மே மாதம்’ படத்தில் இடம் பெற்ற “மார்கழிப் பூவே” என்று துவங்கும் பாடல்.

புல்லாங்குழல் லயத்துடன் துவங்கும் “மார்கழிப் பூவே” பாடலை எழுதியிருப்பவர் பாடலாசிரியர் வைரமுத்து.

பாடலைப் பாடியிருப்பவர் ஷோபா. இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

படத்தில் இந்தப் பாடலை பனி படர்ந்த பசுமை வெளியில் படத்தின் கதாநாயகி ரசித்துப் பாடி அதற்கேற்றபடி ஆடி வரும் பாடல் காட்சியை இப்போது தொலைக்காட்சியில் பார்க்கும் போது ரம்யமாகவே இருக்கிறது.

பாடல் நிறைவடையும் போது வெளிப்படும் ராகக் குழைவு கேட்கும் கணத்தை முழுமையானதாக்கும்.

மார்கழிக் குளிரையும் ரசிக்க வைக்கும்.
அந்தப் பாடல் வரிகள் இதோ:

*****

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

(மார்கழி) 

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேனீர் குடிப்பேன்
வாழ்கையின் ஒரு பாதி நான் இங்கு ரசித்தேன்
வாழ்கையின் மறு பாதி நான் என்று ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்

(மார்கழி) 

வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள் இன்பம்)

(பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள் )

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மகள் காணும் இன்பம் நான் கானவில்லை

(மார்கழி) 

உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை

(மார்கழி) 

You might also like