வழக்குகளை இழுத்தடித்தால் அபராதம்!

– சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சரளா என்பவருக்கும், டாக்டர் பார்த்தசாரதி என்பவருக்கும் இடையேயான வீடு காலி செய்வது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்துடன் வாடகைதாரர்கள் வழக்கை நீட்டிக்க விருப்பப்படலாம் எனவும், ஆனால் அதற்கு நீதிமன்றங்கள் உதவக் கூடாது எனவும் கூறினார்.

அதோடு, வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாக நீதிமன்றம் கருதினால், அந்த மனுக்களை முடிந்தவரை விரைவாக தீர்க்க வேண்டும் என்றும், தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு,  அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

வழக்குகள் நீண்ட காலம் நடப்பது விரக்தியை ஏற்படுத்துவதாக தெரிவித்த நீதிபதி, நவீன தொழில்நுட்பத்தில் முன்னேறிய இந்த உலகில், பொதுமக்களுக்கு எளிதாக நீதி கிடைக்க வேண்டும் என்றும் காலதாமதத்தால் நீதிமன்றத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்றும் கூறினார்.

நீதித்துறை நடைமுறை, மனுக்களை கையாளும் முறை, உத்தரவுகள், தீர்ப்புகளை எளிதாக்குவதுதான் தற்போதைய தேவை என்று குறிப்பிட்ட நீதிபதி சுப்ரமணியம், இந்த வழக்கை இரண்டு மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

You might also like