– நடிகர் அசோக் செல்வன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமைமிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக்செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து, வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வருகிறார். தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தையும் அவர் உருவாக்கியுள்ளார்.
ஓ மை கடவுளே, மன்மத லீலை என வெற்றிப்படங்களைத் தொடர்ந்து அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நித்தம் ஒரு வானம் விமர்சகர்கர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது வெற்றிக்கு உடனிருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஊடக நண்பர்களைச் சந்தித்தார்.
இச்சந்திப்பில் அவர் பகிர்ந்துக் கொண்டதிலிருந்து சில துளிகள் இங்கே…
சினிமா பின்புலம் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தவன். நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். சினிமாவுக்கு வரும் எல்லோருமே கஷ்டப்பட்டுத்தான் வருகிறார்கள்.
அதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் எனக்கு நீங்கள் தந்த ஆதரவும் அன்பும் மிகப்பெரியது. உங்களது விமர்சனங்களும் கருத்துக்களும் தான் என்னைச் செதுக்கியது. என்னுடைய குரு நீங்கள்தான். உங்கள் கருத்துக்களின்படிதான் என் ஒவ்வொரு படத்தையும் தீர்மானிக்கிறேன்.
ஒவ்வொரு படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நித்தம் ஒரு வானம் படமே மூன்று பாத்திரங்கள் என்று நினைத்துதான் செய்தேன். இப்போது அதற்கு வரும் பாராட்டுகள் மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது. அடுத்தடுத்து மாறுபட்ட களங்களில் நிறைய படங்கள் செய்யவுள்ளேன்.
கிராமத்துக் கதையில் நடிக்கவேண்டுமென எனக்கும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு படத்தில் பேசிவருகிறோம் விரைவில் கிராமத்துக் கதையில் என்னைப் பார்க்கலாம்.
எனக்கு இப்போதைக்கு கல்யாணப் பேச்சு இல்லை. ஆனால், வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் என் குணத்திற்கு செட் ஆகாது.
அடுத்ததாக சரத்குமார் சாருடன் இணைந்து ஒரு திரில்லர் படத்தில் நடித்துள்ளேன். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அது பற்றிய தகவல்கள் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக வெளியாகும்” என்று மனந்திறந்துப் பேசினார் அசோக்செல்வன்.