கடன் செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது எப்படி?

– மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் ‘நோட்டீஸ்’

திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. இதற்காக இணையதளத்தில் பல கடன் செயலிகள் உள்ளன.

சிலர் போலி கடன் செயலிகளை உருவாக்கி, கடும் நிபந்தனைகளை விதித்து, அதிக வட்டியில் கடன் வழங்குகின்றனர்.

இந்த மோசடி செயலிகள் கடன் பெறுவோரின் போன் எண்கள், போட்டோக்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர்.

இதை தவறாக பயன்படுத்தி கடன் வாங்கியோரை மன ரீதியாக அச்சுறுத்துகின்றனர்.

கடன் தொகையை விட பல மடங்கு தொகையை ஏஜெண்டுகள் மூலம் வசூலிக்கின்றனர்; இதனால் சிலர் தற்கொலை செய்கின்றனர்.

இணையதள கடன் செயலிகளுக்கு பதிவு எண் வழங்கி ஒழுங்குபடுத்த, வழிகாட்டுதல் உருவாக்கக்கோரி மத்திய அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலர், நிதித்துறை செயலர், ரிசர்வ் வங்கி செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப நேற்று உத்தரவிட்டு, வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

You might also like