சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இந்த திரைப்படத்தை ‘வத்திக்குச்சி’ படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி, “கொரோனா காலகட்டத்திற்கு முன் ‘வத்திக்குச்சி’ இயக்குநர் கின்ஸ்லின், ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் கதையை விவரித்தார்.

கதை கேட்டு முடித்ததும் தயாரிக்கலாம் என முடிவெடுத்தேன். இந்தக் கதைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பொருத்தமாக இருப்பார் என எண்ணி, கதையை சொன்னோம். அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார்.

‘டிரைவர் ஜமுனா’ அற்புதமான கிரைம், திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தின் பிரம்மாண்டம் என்பது கதையின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புதான். நவம்பர் 11ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

இயக்குநர் கின்ஸ்லின், “கிரைம் திரில்லர் ஜானரில் உருவான படம். வாலாஜாபாத் எனும் இடத்திலிருந்து ஈசிஆர் எனும் இடத்திற்கு கூகுளில் பயண நேரம் எவ்வளவு? என்று கேட்டால், ’90 நிமிடம்’ என பதிலளிக்கும்.

அந்த 90 நிமிடமும், கதை தொடங்கிய பிறகு இருபதாவது நிமிடங்களில் பயணம் தொடங்கும். இரண்டு மணி நேரம் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் இந்தப் படம்.‌

நெடுஞ்சாலை பயணமும், காரிலும் தான் மொத்த திரைக்கதையும் பயணிக்கும். இதனை திரைக்கதையாக எழுதும் போதும், இதனை காட்சிப்படுத்தும் போதும் ரசிகர்களுக்கு சோர்வை தராமல் இருப்பதற்கான விசயங்களை இணைத்தோம்.

திரைக்கதை காரில் பயணிப்பதால் கதாபாத்திரங்களுக்கு இடையே நீண்ட நேரம் உரையாடலையும் வைக்க இயலாது. இதனால் நடிகர்களின் முகபாவனைகளையும், நடிப்புத் திறனையும் வைத்து தான் காட்சிகளை நகர்த்தவேண்டியிருந்தது.

வண்டியை ஓட்டும் போது போக்குவரத்து நெரிசல், சாலை விதிகள் அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிலும் அவர்கள் காரில் அமர்ந்து பயணிக்கும் போது காட்சி கோணங்களுக்கு ஏற்ப நடிக்கவும் வேண்டும்.

இவை அனைத்தையும் சவாலாக ஏற்றுக் கொண்டு நடித்து அசத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ்” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “க / பெ ரணசிங்கம் படத்தை முடித்துவிட்டு, நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து, மிக மெதுவாக திரைத்துறையில் பயணிக்கலாம் என திட்டமிட்டிருந்தேன்.

ஆனால் டிரைவர் ஜமுனா படத்தின் கதையைக் கேட்டு ஒரே நாளில் இந்தப் படத்தில் நடிக்கலாம் என தீர்மானித்தேன். என் திரையுலக அனுபவத்தில் ஒரு கதையைக் கேட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் இதுதான்.

சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருவது குறைந்துவிட்டது. ஆனால் சின்ன பட்ஜெட்டாக இருந்தாலும், ஒரு படம் வித்தியாசமானதாகவும், தரமானதாகவும் இருந்தால் அதற்கான ஆதரவு குறையவில்லை. ‘டிரைவர் ஜமுனா’
அந்த வகையிலான படம்.

எனக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். அதிலும் வேகமாக கார் ஓட்டுவேன்.

அதனால் சண்டைப் பயிற்சி இயக்குநர் அனல் அரசிடம் அனைத்து சண்டைக் காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் டூப் போடாமல் நானே நடிக்கிறேன் என வாக்குறுதி அளித்தேன்.

இந்தப் படத்தில் லாரியுடன் நேருக்கு நேர் மோதும் ஒரே ஒரு காட்சியில் சிறிய பகுதியை தவிர, படம் முழுவதும் சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஓட்டினேன்” என்றார்.

பா.மகிழ்மதி

You might also like