சென்னையில் முக்கிய இடங்களில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

– காவல் துறை எச்சரிக்கை 

சென்னை தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், முக்கிய பிரமுகர்கள் குடியிருப்புகள், தூதரகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம், காவல் துறை அலுவலகங்கள், மத்திய மாநில முக்கிய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல், சிறைச்சாலைகள், அரசு தொலைக்காட்சி நிறுவனம், பொதுமக்கள் அதிகளவில் கூடும் வழிப்பாட்டு தலங்கள், தேசிய பூங்காக்கள், காடுகள் போன்ற இடங்களில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை உள்ளது.

திருமண நிகழ்வுகள், கோவில் திருவிழா மற்றும் குறும்படம் தயாரித்தல் உள்ளிட்டவற்றுக்கு முறையாக காவல் துறையின் உரிய அனுமதி பெற்ற பிறகுதான் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்க விட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக உரிய அனுமதி இல்லாமல் ட்ரோன்கள் பறக்க விடுவதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like