ஆடைத்துறையில் சிறப்பு அவசரகால கடன் திட்டத்தை அறிவியுங்கள்!

– பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ஆடைத்துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடியை போக்கிடும் வகையில் சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மேற்கில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல காரணிகளால் ஆடை ஏற்றுமதித்துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.

ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மாதந்தோறும் வளர்ச்சி விகிதம் இப்போது கூர்மையான சரிவைக் காட்டுகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய சந்தைகளை பூர்த்தி செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய பின்னலாடை ஏற்றுமதி தொகுப்புகளில் ஒன்றான திருப்பூர் அலகில் 95% குறு, சிறு நிறுவனங்கள் உள்ளன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கோடைக் காலத்திற்கான கொள்முதல் ஆணைகள் தற்போது சுமார் 40% குறைந்துள்ளது. குறைந்த தேவை காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் ஏற்றுமதி பிரிவுகளும் அவற்றின் குறு சிறு நிறுவன விநியோகஸ்தர்களும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன.

தொழிலாளர் வர்கத்தில் கணிசமான பகுதியைக் கொண்டுள்ள கிராமப்புறப் பெண்கள் வேலைவாய்ப்பு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வர, ஆடைத் துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். புதிய திட்டத்தின் கீழ் 20 சதவீதம் கூடுதல் பிணையமற்ற கடன் வழங்கப்படலாம்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

You might also like