தீபாவளி சிறப்புப் பேருந்துகள்: எந்தெந்த பகுதியிலிருந்து எங்கெங்கு?

தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை மூன்று நாட்கள் சிறப்பு பேருந்துகள் ஆறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை…

சென்னையில் இருந்து தமிழகத்தில் உள்ள பகுதிகளுக்கு 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக சிறப்புப் பேருந்துகள் ஆறு பகுதிகளிலிருந்து இயக்கப்படுகிறது.

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:
சென்னையிலிருந்து மயிலாடுதுறை

மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்: சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அனைத்தும்.

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்: காஞ்சிபுரம், ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் சானட்டோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்:
திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அதை தாண்டி செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் அருகில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்: திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், தாம்பரம் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்: போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

கே.கே நகர் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து பணிமனை: கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு” அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து நெரிசலைத்  தவிர்க்கக் கீழ்கண்ட இடங்களில் பேருந்துகளை நிறுத்தி பின் சென்னை நகருக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடு நோக்கி வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மதுரவாயல் புறவழிச் சாலை வழியாக அம்பத்தூர் நோக்கி திரும்பி சென்று அவரவர் அடைய வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும்.

மாதவரம் ரவுண்டானா மற்றும் மாதவரம் மேம்பாலம் வழியாக 100 அடி சாலைக்கு வரும் கனரக சரக்கு வாகனங்கள் ஜி.என்.டி ரோடு, காவாங்கரை, செங்குன்றம் வழியாக வெளிவட்ட சாலை மார்க்கம் செல்ல வேண்டும்.

100 அடி சாலை பாடி மேம்பாலம் வழியாக கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சி.டி.எச். சாலை வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து 100 அடி சாலை நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் இவிஆர் சாலை வழியாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லவேண்டும்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டை நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவாங்கரை சந்திப்பு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணாநகர் 3வது அவென்யூ, 2வது  அவென்யூ, சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் ரோடு, வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும்.

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள தனியார் வாகனங்கள், மதுரவாயல் நோக்கி செல்பவர்கள் நடுவாங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13 வது மெயின் ரோடு, 2வது அவென்யூ சாலை, எஸ்டேட் ரோடு, வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும்.

அதேபோல் வடபழனி நோக்கி செல்லும் தனியார் வாகனங்கள் என்.எஸ்.கே நகர் சந்திப்பு ரசாக் கார்டன், எம்.எம்.டிஏ காலனி, விநாயகபுரம் வழியாக செல்ல வேண்டும்.

பண்டிகை காலங்களில் பொதுவாகவே தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசல் இருப்பது இயல்பாக உள்ளதால் தென் மாவட்டங்களுக்கு செல்ல நினைக்கும் தனியார் வாகன ஓட்டுனர்கள் ஈ.சி.ஆர், மற்றும் ஓ.எம்.ஆர் சாலை வழியாக செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாக செல்ல வேண்டும்.

அரசு பேருந்துகள் (கோயம்பேடு)
வண்டலூர் மேம்பாலம், இரும்புலியூர், மதுரவாயல், டோல்பிளாசா, கார்த்திகேயன் நகர், எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி, நெற்குன்றம், பூந்தமல்லி பைபாஸ் சாலை, அருகில் மேலும் அதிகப்படியாக கோயம்பேடு நோக்கி வரும் பேருந்துகள் மதுரவாயல் மேம்பாலம், வானகரம் இயேசு அழைக்கிறார் வளாகம், கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு மலர் வணிக வளாகம், கோயம்பேடு காவல் நிலையத்தின் அருகில் உள்ள இடம் ஆகிய இடங்களில் நிறுத்தி வைத்து அங்கிருந்து கோயம்பேடு பேருந்து பணிமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படும்.

ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு மார்க்கெட், இ-ரோட்டில் உள்ள நிறுத்தத்திலிருந்து, இ-ரோடு வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று அங்கிருந்து வெளிவட்ட சாலை, (நசரத்பேட்டை) வழியாக ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்லலாம்.

You might also like