தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற பி.ஆர்.பந்துலு!

கர்நாடக மாநிலம், கோலாரில், 1911 ஜூலை, 26ம் தேதி பிறந்தவர் பி.ராமகிருஷ்ணய்யா பந்துலு என்ற பி.ஆர்.பந்துலு.

ஆசிரியராக வேலை பார்த்து வந்த பி.ஆர்.பந்துலுவிற்கு, நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், சம்சார நாவ்கே என்ற கன்னட படத்தில் நடித்தார்.

அந்தப் படம், சென்னையில் தயாரானது. அதன் தொடர்ச்சியாக, சென்னையும், தமிழும் அவருக்கு வாழ்வாதாரமாயின.

அவர் தயாரித்து இயக்கிய தங்கமலை ரகசியம், 1957-ல் வெளியானது. தொடர்ந்து, தென் மாநில மொழிகளில் 57 படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். அதற்குக் கிடைத்த வரவேற்பு அவருக்கு உற்சாகம் தந்தது.

இவரது இயக்கத்தில் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் கப்பலோட்டிய தமிழன், கர்ணன் ஆகியவை காலத்தால் மறக்க முடியாதவை.

கன்னடத்தின் முதல் வண்ணப் படமான ஸ்ரீகிருஷ்ணதேவராயலு படத்தையும், இவர் தான் தயாரித்து இயக்கினார். இவரைப்பற்றி எத்தனையோ சிறப்புகள் உள்ளன. 

தமிழ்நாட்டில் தியேட்டர்களுக்குள் சுழன்று கொண்டிருந்த தமிழ் சினிமாவை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற முதல் இயக்குனர் பி.ஆர்.பந்துலு படம் வீரபாண்டிய கட்டபொம்மன்.

ஹாலிவுட்டில் தயாராகும் சரித்திர படங்கள் போன்று தானும் ஒரு பிரமாண்ட சரித்திரபடத்தை எடுக்க விரும்பி அவர் எடுத்த படம் தான் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களை எதிர்த்த மாவீரனாக முன்னிறுத்திய படம்.

இந்த படத்தை பி.ஆர் பந்து கேவா கலரில் எடுத்திருந்தார். ஆனால் திரையிட்டு பார்த்தபோது அவர் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை. இதனால் படத்தை லண்டன் கொண்டு சென்று அங்கு டெக்னிக் கலருக்கு மாற்றினார்.

இதனால் பெரிய பட்ஜெட் செலவானது. சென்னையில் உள்ள சொத்துக்களை விற்று அவர் இதனை செய்தார். அதன் பிறகு படம் வெளியாகி வெள்ளி விழா கொண்டாடியது.

தமிழ் நாட்டில் வெளியிடப்படுவதற்கு முன்பே லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் திரையிடப்பட்டது. கெய்ரோவில் நடைபெற்ற ஆப்ரோ-ஆசியா திரைப்பட விழாவில் சிவாஜியின் நடிப்பு அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்று தந்தது.

அதே விழாவில். ஜி.ராமநாதன் சிறந்த இசை இயக்குனர் விருதையும், படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றது. சர்வதேச விருதைப் பெற்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி ஆவார்.

7-வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்படத்தின் ஒரு பகுதியாக மெரிட் சான்றிதழைப் பெற்றது.

You might also like