முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி!

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

அதன்படி இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு திடலில் நேற்று நடந்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென்னாப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக டி காக் – கேப்டன் பவுமா ஆகியோர் களமிறங்கினர். தீபக் சஹார் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் பவுமா ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு 2-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தார். அந்த ஓவரில் டி காக் (1 ரன்), ரிலீ ரோஸோ (டக் அவுட்), மில்லர் (டக் அவுட்) ஆகியோரை வெளியேற்றி அர்ஷ்தீப் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

இதனால் தென்னாப்பிரிக்க அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தொடக்கத்தில் தடுமாறியது.

ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடிய ஐடன் மார்க்ரம், ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும் பின்வரிசையில் பார்னெல் – கேசவ் மகாராஜ் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இருப்பினும் இந்திய அணியின் அசத்தல் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பார்னெல் 24 ரன்களிலும் கேசவ் மகாராஜ் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சூர்யகுமார் 50 ரன்களும் (33 பந்துகள்), ராகுல் 51 ரன்களும் (56 பந்துகள்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

You might also like