தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

நிரந்தரத் தீர்வு காண தமிழக மீனவர்கள் கோரிக்கை.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை அடிக்கடி கைது செய்து வரும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர்.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் எந்த சுமூக முடிவும் எட்டப்படாததால், மீனவர்களின் கைது நடவடிக்கை தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நாகை மீனவர்கள் 8 பேரை சிறைபிடித்துள்ள இலங்கை கடற்படை, அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.

இலங்கை கடற்படையால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகும் தமிழக மீனவர்கள், இதற்கு நிரந்தரத் தீர்வு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like