விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்!

இரவு நேர வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாலே நமக்கு நேரம் போவது தெரியாது. அங்கேயே கொஞ்ச நாட்கள் தங்கியிருக்கும் வாய்ப்பு கிடைத்தால்… இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணிகளுக்காக இதுவரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் விண்வெளியில் பயணம் செய்துள்ளனர்.
ஒருவர் மறைந்த விண்வெளி வீரர் கல்பனா சாவ்லா. இன்னொருவர் சுனிதா வில்லியம்ஸ்.

1965-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி அமெரிக்காவின் ஓஹாயோ மாநிலத்தில் யூக்ளிட் என்ற இடத்தில் பிறந்தார் சுனிதா.

வேலையில் இருந்து கொண்டே பொறியியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார் சுனிதா. இதைத் தொடர்ந்து 1998-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சி விண்வெளி வீரராகத் தேர்வு செய்யப்பட்டார்.

கடுமையான பயிற்சிகளையும் விரைவாக முடித்து சிறந்த விண்வெளி வீரர் ஆனார்.

இதனால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று பணியாற்றும் அதிர்ஷ்ட வாய்ப்பை சுனிதாவுக்கு வழங்கி கௌரவித்தது நாசா.

2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி இரவு 8.47 மணிக்கு அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து கம்பீரத்துடன் சீறிப்பாய்ந்தது டிஸ்கவரி விண்கலம்.

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய், விமானப் பொறியாளர் என்ற அந்தஸ்துடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை இரண்டு நாள் பயணத்துக்குப் பின் அடைந்தார் சுனிதா.

அவருடன் பயணம் செய்த 7 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நீல நிறத்தில் விண்ணில் மிதந்து கொண்டிருந்த நம் பூமி பந்தைப் பார்த்து ரசித்தனர்.

இந்த மகிழ்ச்சியை தன் வீட்டுக்குப் போன் செய்து பெற்றோருடன் பகிர்ந்து கொண்டார். விண்வெளி நிலைய கட்டுமானப் பணிகளில் சிறப்பாகவும் பணியாற்றினார் சுனிதா.

இதற்காக 4 முறை விண்வெளியில் நடந்து சென்று புதிய சாதனையையும் படைத்தார். மொத்தம் 12 மணி நேரம் 55 நிமிடங்கள் விண்வெளியில் நடந்தார் சுனிதா. இதுவரை யாரும் நிகழ்த்திடாத அரிய சாதனை இது.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like