அரசுப் பேருந்துகளில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு சிறப்புச் சலுகை!

தமிழக அரசு பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்களின் உபகரணங்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்ட நிர்வாகம் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இதுகுறித்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “நாடக கலைஞர்களுக்கு மட்டும் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில், 50 சதவீத பயண கட்டண சலுகையுடன் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை கட்டணமில்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதை ஏற்று, கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள், அரசு பேருந்துகளில் தொழில் முறையாக பயணம் செய்யும் போது, 50 சதவீத பயணக் கட்டண சலுகை பெறலாம்.

அவர்கள் எடுத்து வரும் இசைக் கருவிகள், தொழில் கருவிகளை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

தப்பாட்டம், மாடு, மயில், காவடி, கரக ஆட்டங்கள், பொய்க்கால் குதிரை, கொல்லி கட்டை, நையாண்டி மேளம், நாதஸ்வரம், பம்பை, உருமி, உடுக்கை, ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், தவில் மற்றும் சிறிய அளவிலான கருவிகளையும் இலவசமாக எடுத்துச் செல்லலாம்.

அவர்களின் சலுகைக் கட்டணப் பயணம், எடுத்துச் செல்லும் கருவிகளின் விபரங்களை வழிப்பட்டியலுடன் இணைத்து அலுவலகத்தில் கண்டக்டர்கள் சமர்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலவசப் பயணத்தை, மதுரை, கும்பகோணம், கோவை, சென்னை, விழுப்புரம், சேலம் கோட்ட பஸ்களிலும் அனுமதித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு, நாட்டுப்புற கலைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like