2021-ல் போதை, மதுவால் 10,500 பேர் தற்கொலை!

– தமிழகத்தில் 1319 பேர் இறந்ததாக தகவல்

அண்மையில் வெளியான 2021-ம் ஆண்டின் தேசிய குற்றஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் போதைப் பொருள் மற்றும் மது பழக்கத்தின் காரணமாக  தற்கொலை செய்துகொண்டவர்கள் பற்றிய அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒன்றுக்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்வது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் 2020-ல் 9,169 பேர் போதை பொருள் மற்றும் மது பழக்கத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்டனர்.

இந்த எண்ணிக்கை 2021-ம்ஆண்டில் 10,500 ஆக அதிகரித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் அதிகப்பட்சமாக 2,818 பேர் தற்கொலை செய்து கொண்டதால் அந்த மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

அடுத்த நிலையில் மத்தியப் பிரதேசம் (1,614 பேர்), தமிழ்நாடு (1,319 பேர்), கர்நாடகா (902 பேர்) ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.

2015-ம் ஆண்டில் 100-க்கும் குறைவான வழக்குகளைக் கொண்டிருந்த கர்நாடகா, கடந்த 2021-ல் 902 வழக்குகளை கொண்டிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்த மனநல மருத்துவர்கள், ‘‘தற்கொலைகள் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக மட்டும் நடக்காது. அதற்கு பல பிரச்சினைகள் காரணமாக இருக்கும்.

போதைப்பொருள், மது பழக்கம் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் இந்தத் தீய பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு மனச்சோர்வு அதிகமாக இருக்கும்.

போதை பொருளை அதிகமாக உட்கொண்டால் இன்னும் மனச்சோர்வு அதிகரிக்கும். அதனால் தற்கொலை முடிவை பிறரை காட்டிலும் அதிகம் எடுக்கின்றனர்’’ என்றனர்.

You might also like