அதிமுக தீர்ப்பு: ஓ.பி.எஸ்.க்கு வெற்றியா?

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்காக கடந்த 11-ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடந்தது.

இந்த பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்றும், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து அ.தி.மு.க. பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அதில், “ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்பதால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

பொதுக் குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்றும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்” என்றும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது.

ஆனால், நீதிபதி கிருஷ்ணன் இந்த வழக்கை விசாரிக்க ஆட்சேபம் தெரிவித்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது.

இதையடுத்து, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியிடம் ஒப்படைத்துவிட்டு இந்த வழக்கில் இருந்து விலகினார்.

தனி நீதிபதி கிருஷ்ணன் இந்த வழக்கில் இருந்து விலகியதையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றப்பட்டது.

இரண்டு நாடகளாக நடந்த இந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை தள்ளிவைத்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டது.

அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பில், “அ.தி.மு.க வின் ஜூன் 23 -ம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்ட வேண்டும். தனிக் கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

இதனிடையே இந்த வழக்கில் எடப்பாடி தரப்பில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க இந்த தீர்ப்பு மூலம் அதிமுகவின் இரு அணிகளாக உள்ள எடப்பாடியும், பன்னீர்செல்வமும் ஒன்று சேர்வதற்கான சூழல் உருவாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே இரு அணிகளையும் ஒன்று சேர்ப்பதற்கான முயற்சிகளை பாஜக மேற்கொண்டது நினைவு கூரத்தக்கது.

You might also like