விரைவில் தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் மேதகு-2!

கடந்த 2021 ஜூன் மாதம் தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது.

தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது.

சிங்கள அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதையும், சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானது.

1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்சனைகளைச் சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படி துணிச்சலாக எதிர்கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது.

பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது.

இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருட காலகட்டத்தில் என்ன நடந்தது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்ட உணர்வு கொண்ட இளைஞர்களை ஒன்றுசேர்த்து உரிமையை மீட்டெடுப்பதற்காக புதிய இயக்கத்தை உருவாக்கியது முதல் இழப்புகள், தியாகங்கள் என புலிகள் இயக்கம் உருவானது எப்படி,

அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, எம்ஜிஆர் ஆகியோர் இந்திய மண்ணில் பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது.

1983 – ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கை முழுவதும் நாடளாவிய பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை நடைபெற்ற கருப்பு ஜூலை கலவரத்தையும்,

அதனால் ஒன்றரை லட்சம் மக்கள் உலகெங்கும் அகதிகளாக புலம்பெயர்ந்த துயர நிகழ்வையும் இதில் காட்டுவதுடன், அதற்கு காரணம் என்ன, அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

அதே போன்று 1981-ஆம் ஆண்டு தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு யாழ் நூலகத்தை தீக்கிரையாக்கிய துயரமான சம்பவம் நடைபெற்றது.

பெரிய அளவில் வெளியே தெரியாத இந்த சம்பவத்தின் பின்னணியையும் தெரியப்படுத்தி உள்ளனராம்.

கதாநாயகனாக தமிழீழ தலைவர் கதாபாத்திரத்தில் கௌரிசங்கர் நடித்துள்ளார். கௌரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார்.

இரா.கோ. யோகேந்திரன் படத்தை இயக்கியுள்ளார்.

கதை மற்றும் வரலாற்று ஆய்வில் மேதகு திரைக்கள குழுவினருடன் சுபன் முன்னின்று உதவி புரிந்துள்ளார்.

ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளிநாட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தியேட்டர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாகிறது.

அதன் மூலம் படத்தை திரையிடமுடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் படத்தைப் பார்க்கமுடியும்.

பா. மகிழ்மதி

You might also like