பாடிபில்டர்களின் கனவை நிஜமாக்கிய நிறுவனம்!

சமீபத்தில் ஆதித்யராம் குழும நிறுவனங்களின் தலைவர் ஆதித்யராம், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுரேஷ், ஈஸ்வர் கார்த்திக் ஆகிய இரு பாடிபில்டர்களின் கனவுகளை நனவாக்க உதவியுள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் என்பவர் கோயம்பேடு சந்தையில் கூலி வேலை செய்துவந்தார்.

மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் இந்தியா உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு உடற்கட்டமைப்புப் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

ஆசிய பாடி பில்டிங் மற்றும் பிஸிக் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் – 2022-இல் பங்கேற்க சுரேஷ் விரும்பினார்.

ஒரு கட்டத்தில் நம்பிக்கையை இழந்த அவர், பின்னர் ஆதித்யாராமை அணுகினார். சுரேஷின் ஆர்வத்தையும் திறமையையும் புரிந்துகொண்டு அவர் பண உதவி மட்டுமின்றி பெரும் ஊக்கத்தையும் வழங்கினார்.

ஆதித்யராம் உதவியால் 54-வது ஆசிய உடற்கட்டமைப்பு மற்றும் உடற்கட்டு விளையாட்டு சாம்பியன்ஷிப் – 2022-இல் பாரா பாடி பில்டிங் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் சுரேஷ்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஈஸ்வர் கார்த்திக்குக்கு கல்லூரி நாட்களில் இருந்தே பாடிபில்டராக சாதிக்கவேண்டும் என்று ஆர்வம்.

வறுமையில் வாடிய போதும் அவரது இந்த ஆர்வம் மூலம் மிஸ்டர் சென்னை போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல காரணமாக அமைந்தது.

ஆனால் நிதி நிலைமை காரணமாக அவரால் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியவில்லை.

ஈஸ்வர் கார்த்திக்கின் திறனையும் ஆர்வத்தையும் அடையாளம் கண்ட ஆதித்யராம், அவருக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்தார்.

மாலத்தீவில் நடைபெற்ற ஆசிய பாடி பில்டிங் போட்டி – 2022-இல் பங்கேற்ற ஈஸ்வர் கார்த்திக் சீனியர் ஆண்கள் பாடி பில்டிங் சாம்பியன்ஷிப்பில் (100 கிலோ பிரிவு) தங்கப் பதக்கம் வென்றார்.

இம்முயற்சி பற்றிப் பேசிய ஆதித்யராம், “இவர்களைப் போன்ற திறமைசாலிகளை கண்டறிந்து ஊக்கமளிப்பது நமது கடமை.

ஈஸ்வர் கார்த்திக், சுரேஷ் போன்றவர்கள் நம்முடைய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதுபோன்ற திறமை கொண்டவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை மக்கள் செய்யவேண்டும்” என்றார்.

பா. மகிழ்மதி

You might also like