கலவரத்தால் இயல்புநிலையை இழந்த கள்ளக்குறிச்சி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குணியாமூரில் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற 12ம் வகுப்பு மாணவி பள்ளியில் உயிரிழந்தார்.

எனவே மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் இறங்கினர்.

நேற்று மாணவி பயின்ற பள்ளி முன்பு நூற்றுக் கணக்கானோர் திரண்டு, மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தடையை மீறி நடைபெற்ற போராட்டத்தை கலைக்க முயன்ற காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.

இதற்கிடையில், மாணவி பயின்ற பள்ளி வளாகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள், கண்ணில் எதிர்படுபவை மீதும் போலீசார்காவல்துறையினர்

மீதும் கற்களை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் கள்ளக்குறிச்சி எஸ்.பி உள்ளிட்ட காவலர்களுக்கும் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் வாகனங்களையும் செய்தியாளர்களின் வாகனங்களையும் தீ வைத்துக் கொளுத்தினர்.

அதோடு டிராக்டர்களைக் கொண்டு, பள்ளி பேருந்துகளை இடித்து நொறுக்கினர். போராட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதாலும் பதற்றம் தொடர்ந்ததாலும், காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதற்றத்தைத் தணிக்க அதிவிரைவுப் படையினரை வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் போராட்டக்காரர்களைத் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனர். ஆனால், அப்போதும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் அங்கு பதற்றம் உருவானது. கலவரம் மூண்ட கணியாமூர் பகுதியில் செல்போன் மூலம் வதந்திகள் பரவுவதைத் தடுக்க ஜாமர்கள் பொருத்தப்பட்டன.

போராட்டக்காரர்கள் ஒன்றிணைவதைத் தடுக்க, நெட்வொர்க்குகள் தடை செய்யப்பட்டு, அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலவரக்காரர்களால் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி வளாகத்தை தமிழக உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, மாணவி உயிரிழப்பு தொடர்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமிரா காட்சிகள் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருவதாகவும், கலவரம் தொடர்பாக இதுவரை 192 பேரை கைது செய்துள்ளதாகவும் கூறினார்.

இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், செயலாளர், பள்ளி முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இந்த வழக்கு மேல் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து சந்தேகங்களையும் குற்றப் புலனாய்வுத்துறை விசாரிக்கும் என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கலவரத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர்களை டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

You might also like