மார்க்சிய சிந்தனையாளர் கோவை ஞானியை நினைவு கூர்வோம்!

சிந்தனையாளர், எழுத்தாளர், மார்க்சிய ஆய்வாளர், தமிழியலாளர் கோவை ஞானியின் பிறந்தநாள் (01.07.1935) இன்று.

ஞானியின் இயற்பெயர் பழனிச்சாமி. கோவையிலும், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் தமிழிலக்கியம் கற்றார். தமிழாசிரியராக கோவையில் 30 ஆண்டு காலம் பணியாற்றினார்.

நீரிழிவு நோய் காரணமாக தனது கண்பார்வை இழந்தால் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இவர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மார்க்சியக் கோட்பாட்டாய்வுகளையும் செய்து வந்தார். மார்க்சிய ஆய்வாளரான எஸ்.என். நாகராஜனின் வழி வந்தவர்.

இளம் மார்க்சு முன்வைத்த அந்நியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்சியத்தை விளக்க முயன்றவர்.

மார்க்சியப் பார்வையில் 25-க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய நூல்களை இவர் எழுதினார். மார்க்சியம் குறித்தும் சமயம், மெய்யியல் குறித்தும் பல நூல்களை வெளியிட்டார்.

28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளதோடு தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

மார்க்சிய இதழாகிய புதிய தலைமுறையோடும் வானம்பாடி இயக்கத்தோடும் தொடர்பு கொண்டிருந்தார். பின்னர் பரிமாணம், நிகழ், தமிழ்நேயம் ஆகிய சிற்றிதழ்களை நண்பர்கள் ஒத்துழைப்போடு இவர் வெளியிட்டார்.

புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது, கனடா-தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது ‘இந்து தமிழ் திசை’ வழங்கிய சாதனையாளர் விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்

கோவை ஞானி 22.07.2020 அன்று தனது 86-வது அகவையில் இயற்கையானார்.
இவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த தோழர் வே.ஆனைமுத்து இவருடனானத் தொடர்பை மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதினார்.

மா.பெ.பொ.க. 2006-ல் சிதம்பரத்தில் நடத்திய ‘சிந்தனையாளன் பொங்கல் மலர்’ வெளியீடு மற்றும் ‘தன்னுரிமைத் தமிழ்த்தேச எழுச்சி முரசு’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று சீரிய கருத்துரையாற்றினார்.

அந்த நூலில் வரலாறுகளை விளக்கும் தன்மையில் 19 தேசப்படங்ளைச் செப்பம் செய்து வெளியிட பேராசியியர் த செயராமன் அவர்கள் கொடுத்திருந்தார்.

அப்படங்களை வெளியிட பேராசிரியர் த.செயராமன் எடுத்துக்கொண்ட அக்றையை, முயற்சியை ஞானி அவர்கள் பாராட்டிய உரை, கண்பார்வை அற்ற ஒருவரின் உரைதானா என வியந்தேன்.

கோவை ஞானி அவர்களுக்கு புகழ் வணக்கம்.

நன்றி: டிபி.செயராமன்.

You might also like