என் பாடல்களில் தரம் இருக்கும்!

வளரும் பாடலாசிரியர் தரன்!

அண்மையில் நயன்தாரா நடித்த ஓ2 படத்தில் பயணம் குறித்தான பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அதில் வரும் வரிகள்தான் இவை…

காத்தோடுதான் காத்தாக மெதப்போம்

நீரோடுதான் நீராக கலப்போம்

இயற்கையின் மடியில் கொஞ்சம்

வா சோம்பல் முறிப்போம்… 

இதை எழுதியவர் வளர்ந்துவரும் பாடலாசிரியர் தரன். இலக்கியத் தரத்தோடு சினிமா பாடல்கள் வரவேண்டும். அதே நேரத்தில் எளிதான வரிகளை உள்ளடக்கியும் இருக்க வேண்டும் என்கிற முனைப்போடு பாடல்களை எழுதி வருகிறார்.

தமிழில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் தரன், சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் எழுதிய ‘பக்கா மிடில் கிளாசுடா’ என்ற பாடல் மிடில் கிளாஸ் இளைஞர்களின் மோட்டிவேசன் பாடலாக இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

மேலும்  ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு, திரிஷாவின் பரம்பத விளையாட்டு, எஸ்.எஸ்.குரமன் இசையில் பட்டதாரி உள்ளிட்ட சில படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். தனியிசை ஆல்பங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.

அயல்நாடுகளில் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்கள் தமிழில் பேசுவதோடு நின்றுவிடக் கூடாது. தமிழ் இலக்கண இலக்கியங்களை அறிந்துகொள்வதோடு, பிழையின்றி எழுத படிக்கவும் செய்யவேண்டும் என்று நினைக்கிறார் தரன்.

அதற்காக கணினி வழியாக அவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவதைக் கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகரமாகவும் செய்துவருகிறார்.

பாடலாசிரியர்களில் வைரமுத்துவையும் பட்டுக்கோட்டையையும் அதிகம் நேசிக்கும் தரன், தன் பாடல்களிலும் அப்படி ஒரு தரம் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்.

ஓ2 படத்தைத் தொடர்ந்து யங் மங் சங், ரஜினி, சண்டக்காரி, சூப்பர் ஸ்டார், ஒன் டூ ஒன், எம்.ராஜேஷ் இயக்கத்தில் வரவிருக்கும் படம் என கைவசம் கணிசமான வாய்ப்புகளை வைத்திருக்கிறார் தரன்.

பாடலோடு மட்டுமல்லாமல் தற்பொழுது சன்னி லியோன், பிரியா மணி நடிக்கும் Quotation gang திரைப்படத்தில் வசனமும் எழுதிவருகிறார்.

பா. மகிழ்மதி

You might also like