மாமனிதனுக்காக காயத்ரிக்குத் தேசிய விருது கிடைக்கும்!

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள படம் மாமனிதன். யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை சேர்த்துள்ளனர். இதுவொரு குடும்பப் படமாக உருவாகியுள்ளது.

ஜூன் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தைப் பற்றிய பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அதில் பங்கேற்றுப் பேசிய நடிகர் ஆர்கே. சுரேஷ், “வாழ்வியலைப் பற்றி படமாக எடுக்கும் இயக்குநர்கள் குறைவாக உள்ளனர். அவர்களில் ஒருவர் சீனுராமசாமி.

தர்மதுரையின் சாயலில் இல்லாமல் ஒரு புது அனுபவமாக இந்த படம் இருக்கும். இது எல்லோருடைய வாழ்கையிலும் அவர்கள் தொடர்புபடுத்திக் கொள்ளும் படமாக இருக்கும்.

இந்த கதை மூன்று இடங்களில் நடக்கும், தேனியில் ஆரம்பித்து, கேரளா சென்று, காசியில் முடிவடைவதுபோல் கதைய அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் எனக்கு ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதி சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளார். இந்தப் படம் அவருக்குப் பெரிய வெற்றியைக் கொடுக்கும்” என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, “நீங்க நடித்தால் நானும் – அப்பாவும் ம்யூசிக் பண்றோம் என யுவன் ஒரு நாள் சொன்னார். அப்படித் துவங்கிய படம்தான் மாமனிதன்.

மிகப்பெரிய விஷயத்தை எளிமையா சொல்லக்கூடிய இயக்குநர் சீனு ராமசாமி. அப்படிதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

நான் நடிகனாக ஆசைப்பட்ட காலத்தில் குருசோமசுந்தரம்போல் நடிக்கவேண்டும் என ஏக்கம் இருக்கும். அப்படிப்பட்ட நடிகர் குரு சோமசுந்தரம்.

இந்தப் படத்தைக் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க இயக்குநரும், ஒளிப்பதிவாளரும்தான் காரணம். மூன்று இடங்களில் நடக்கக்கூடிய கதையை இவ்வளவு சீக்கிரம் எடுத்து முடிக்க இருவர்களுடைய அர்ப்பணிப்பு தான் காரணம்.

யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து என் படத்திற்கு இசையமைக்கப் போகிறார்கள் என்ற வாய்ப்பு எனக்கு வந்தபோது, சீனுராமசாமி தான் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். இந்தப் படம் ஒரு பெரிய அனுபவமாகப் பார்ப்பவர்க்கு இருக்கும்.” என்றார்.

இயக்குநர் சீனுராமசாமி, “இந்தக் கதை பலரால் நிராகரிக்கப்பட்டது. அப்போதுதான் விஜய் சேதுபதி என்னை அழைத்தார். யுவன் சங்கர்ராஜா தயாரிக்க முடிவெடுத்தபோது, நான் அவர்களுக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன்.

இந்தப் படம் இளையராஜா அவர்கள் வாழ்ந்த இடத்தில் படமாக்க விரும்பினேன். தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன.

நடிகர்களுக்குள் இருக்கும் இயல்புணர்ச்சியை வெளிகொண்டுவருவதே என்னுடைய பணியாக இருந்தது.

நான் பல நடிகைகளுக்குக் கதை சொன்னேன். பலருக்கு இரண்டாம் பாதியில் விருப்பம் இல்லை. அப்போது காயத்ரி இந்தப் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி நடித்தார்.

கண்டிப்பாக காயத்ரிக்குத் தேசிய விருது கிடைக்கும். நம்மைச் சுற்றியுள்ள மாமனிதர்களை அடையாளப்படுத்தும் படம் தான் இது” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

பா. மகிழ்மதி

You might also like