டி20 தொடர்: இந்திய அணியின் வெற்றி தொடருமா?

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

தொடரில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (ஜூன் 17) நடக்கிறது.

முதல் இரு ஆட்டங்களில் சொதப்பிய இந்தியா 3-வது ஆட்டத்தில் எழுச்சி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட்டின் அரைசதமும், ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹலின் அபார பந்து வீச்சும் இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தது.

இருப்பினும் இளம் கேப்டன் ரிஷப் பந்தின் (29, 5, 6 ரன்) பேட்டிங் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த ஆட்டத்திலாவது அவர் அதிரடி காட்டுவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்திலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் உள்ள இந்திய அணி அதற்கான வியூகங்களை வகுத்துள்ளது.

You might also like