எந்த சமூகத்தையும் தவறாகப் பேசுவதை அனுமதிக்கக் கூடாது!

– சென்னை உயர்நீதிமன்றம்

பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசிய நடிகை மீராமிதுன் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் மீரா மிதுன் மீது சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தில், கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து, இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மீரா மிதுன், அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி பரத் சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நம் நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் சமமானவர்கள் என்றும் எந்த ஒரு சமூகத்தைப் பற்றியும் தவறாகப் பேசுவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

பின்னர் மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததை ஏற்று, அதற்கு அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

You might also like