ஓலைச்சுவடியில் இருந்த தமிழை அச்சுக்கேற்றிய உ.வே.சா!

150 ஆண்டுகளுக்கு முன் (தமிழன் இன்று பெருமையாகப் பேசிக் கொள்ளும்) சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற 90க்கு மேற்பட்ட பனையோலைச் சுவடிகளுக்கு அச்சு வடிவம் கொடுத்தவர் உ.வே. சுவாமிநாதய்யர்.
3000 க்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

இவர் இல்லையென்றால் தமிழனின் இன்றைய பெருமிதம் இல்லை.

தமிழ்த் தாத்தா சேர்த்து வைத்த சொத்தில் வாழும் பேரன்கள் நாம். உ.வே.சாவின் நினைவு நாளான இன்று.

இவரது ‘என் சரித்திரம்’ படித்துப் பார்த்தால் ஒரு புனைகதையாளரைப் போல் அவர் உரைநடையைக் கையாள்வதை நாம் காணலாம்.

ஒரு சின்ன எடுத்துக்காட்டு:

“அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல் அவர் வந்தார்.

நல்ல வளர்ச்சியடைந்த தோற்றமும், இளந்தொந்தியும், முழங்கால் வரையில் நீண்ட கைகளும், பரந்த நெற்றியும், பின் புறத்துள்ள சிறிய குடுமியும், இடையில் உடுத்திருந்த தூய வெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோற்றச் செய்தன.

ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற அமைதியே தோற்றியது.

கண்களில் எதையும் ஊடுருவிப் பார்க்கும் பார்வை இல்லை; அலக்ஷியமான பார்வை இல்லை; தம் முன்னே உள்ள பொருள்களில் மெல்லமெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வைதான் இருந்தது.

உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை ‘என் சரிதம்’ என்று ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950ஆம் ஆண்டில் தனிப் புத்தக வடிவம் பெற்றது.

இந்நூலின் பி.டி.எஃப் கணிணியில் ஏராளமாக உள்ளன.

இன்றைக்காவது உ.வே.சாவின் “என் சரித்திரம்” படித்துப் பார்த்து அவருக்கு நாம் நன்றி செலுத்துவோம்.

நன்றி: இந்திரன் முகநூல் பதிவு

You might also like