7 பேர் விடுதலை: ஆளுநர் தனியே முடிவெடுக்க அதிகாரமில்லை!

– உச்சநீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின்போது, “பேரறிவாளனை விடுதலை செய்வதே இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு” என்று குறிப்பிட்டனர்.

ஆளுநரின் அதிகாரம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், “மாநில அமைச்சரவை அனுப்பக் கூடிய பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப என்ன அதிகாரம் உள்ளது?

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. ஆளுநர், குடியரசுத் தலைவரின் அதிகாரங்களுக்குள் போகாமல் பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது?

மாநில அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டால், அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். மாநில ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்தக் கண்ணோட்டத்தில் செல்ல முடியாது.

பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும்”

– என உத்தரவிட்ட நீதிபதிகள் பேரறிவாளன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க தமிழக அரசுக்கும், வழக்கறிஞருக்கும் அறிவுரை வழங்கினர்.

You might also like