இன்பத் தமிழ் எங்கள் உரிமை!

– ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்ட டுவிட்

நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37-வது கூட்டம் அதன் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையில் நடந்தது. இதில் துணைத்தலைவர் பிரிதகரி மக்தாப் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் இந்தி மொழியை வளர்ப்பது குறித்து பேசியஅமித்ஷா, “நாட்டின் ஒற்றுமையின் முக்கிய அங்கமாக அலுவல் மொழியை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

பிற மொழிகளைப் பேசும் மாநில குடிமக்கள் தங்களுக்குள்ளே உரையாடும் மொழி, இந்திய மொழியாகவே இருக்க வேண்டும்.

இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும், மாறாக உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வாக மாற்றாவிட்டால், அது பரவாது. மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல்கள் தற்போது இந்தியில்தான் தயாரிக்கப்படுகின்றன.

நாட்டின் 8 வடகிழக்கு மாநிலங்களில் 22 ஆயிரம் இந்தி ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வடகிழக்கைச் சேர்ந்த 9 பழங்குடி இனங்கள் தங்கள் பேச்சு வழக்கு எழுத்துகளை தேவநாகரிக்கு மாற்றியுள்ளனர்.

எட்டு வடகிழக்கு மாநிலங்களும், தங்கள் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக்க ஒப்புக்கொண்டு உள்ளன” என்று அமித்ஷா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளைக் குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்திலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற கவிதையில் வரும், ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளைச் சுட்டிக்காட்டியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ‘ழகரம் ஏந்திய தமிழணங்கு’ என்ற வார்த்தைகளைத் தாங்கிய போட்டோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

அதில் ‘ழ’ கரத்தை தாங்கிய பெண் தாண்டவமாட, கீழே ‘தமிழணங்கு’ என்றும், புரட்சிக்கவிஞரின் பாடல் வரிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

You might also like