ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா மோதல்!

இந்தியாவில் 15-வது ஐ.பி.எல். தொடர் இன்று தொடங்கி மே மாதம் இறுதி வரை (மார்ச் 26 – மே 29) நடைபெற உள்ளது. சென்னை, மும்பை, கோல்கட்டா, குஜராத், லக்னோ உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை அணி, கோல்கட்டாவை சந்திக்கிறது. கடந்த முறை பைனலில் இவ்விரு அணிகளே மோதின.

அப்போது டுபிளசி (86 ரன்), மொயீன் அலி (37), ஷர்துல் தாகூர் (3 விக்கெட்) கைகொடுக்க, சென்னை அணி கோப்பை வென்றது.

இந்த முறை நிலைமை தலைகீழாக உள்ளது. சமீபத்திய ‘மெகா’ வீரர்கள் ஏலத்திற்கு பின் அனைத்து அணிகளும் மாற்றம் கண்டுள்ளன. பெங்களூரு அணி கேப்டனாகி விட்டார் டுபிளசி. டெல்லி அணிக்குச் சென்று விட்டார் ஷர்துல்.

சென்னை அணியை 12 ஆண்டுகளாக வழிநடத்திய ‘தல’ தோனி சாதாரண வீரராக களமிறங்குகிறார். புதிய கேப்டனாக ‘ஆல்-ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா அசத்த காத்திருக்கிறார்.

இவருக்கு துவக்க வீரர் ருதுராஜ், ராயுடு கைகொடுக்கலாம். இந்த மூவரின் பெயரும் ஆங்கில எழுத்தான ‘ஆர்’ என்ற எழுத்தில் துவங்குவது சிறப்பு.

‘விசா’ பிரச்னையில் சிக்கிய மொயீன் அலி இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார். நியூசிலாந்தின் அதிரடி துவக்க வீரர் டேவன் கான்வே, உத்தப்பா, பிராவோ, தோனி என பேட்டிங் படை நீள்கிறது.

‘கூல்’ தோனியின் வியூகம் அணிக்கு யானை பலம். பந்துவீச்சில் தீபக் சகார் இல்லாதது பலவீனம். இவருக்கு பதில் ஜோர்டான் வாய்ப்பு பெறலாம். ஆடம் மில்னே, சான்ட்னர் சாதிக்கலாம்.

மகராஷ்டிராவின் இளம் ‘ஆல்-ரவுண்டர்’ ராஜ்வர்தன் ஹங்கர் கேகரை, ரூ. 1.5 கோடி கொடுத்து சென்னை வாங்கியது. மணிக்கு 140 கி.மீ., வேகத்தில் பந்துவீசும் இவர், அதிரடியாக பேட் செய்யும் திறன் பெற்றவர். இவரும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளார்.

கடந்த முறை கொல்கத்தா கேப்டனாக மார்கன் இருந்தார். இம்முறை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது அந்த அணி.

‘சுழல்’ ஜாலம் காட்ட சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி உள்ளனர். வேகத்தில் கலக்க சவுத்தீ, உமேஷ் யாதவ், ஷிவம் மாவி உள்ளனர்.

‘ஆல்-ரவுண்டர்’ ஆன்ட்ரே ரசல் இருப்பது கூடுதல் பிளஸ். பின்ச், பாட் கம்மின்ஸ் துவக்க போட்டிகளில் பங்கேற்க இயலாதது பலவீனம்.

ஐ.பி.எல்., துவக்க விழா முன்பு எல்லாம் பிரமாண்டமாக நடக்கும். 2019-ல் துவக்க விழா ரத்து செய்யப்பட்டு, அதற்கான நிதி புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

2020, 21ல் கொரோனா காரணமாக விழா நடக்கவில்லை. இந்த முறையும் துவக்க விழா கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 30 கோடி செலவு செய்ய வேண்டியிருப்பதால், துவக்க விழாவை பி.சி.சி.ஐ. ரத்து செய்துள்ளது.

You might also like