மார்ச் இறுதியுடன் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி!

– மத்திய அரசு தகவல்

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் முதல் முறையாக ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது.

இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா அளித்துள்ள அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “கடந்த 24 மாதங்களில் நோய் கண்டறிதல், கண்காணிப்பு, தொடர்புத் தடமறிதல், சிகிச்சை, தடுப்பூசி போன்ற பல்வேறு அம்சங்களில் தொற்றுநோய் மேலாண்மைக்கான குறிப்பிடத்தக்க திறன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் தெரிந்துள்ளது.

ஒவ்வொரு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் சொந்த திறன்களையும், அமைப்புகளையும் உருவாக்கியுள்ளன. தொற்றுநோயை நிர்வகிப்பதற்கான விரிவான குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளன. கடந்த ஏழு வாரங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கையும் சரிந்து வருகின்றன.

நேற்றைய பதிவின்படி நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு புதிதாக 23,913 ஆக பதிவாகியுள்ளது. பாசிட்டிவ் ரேட்டும் 0.28 சதவீதமாக குறைந்துள்ளது. அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சியுடன் நாட்டில் 181.56 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டள்ளன.

தொற்று நோயை சமாளிக்கும் திறன் மற்றும் தயார் நிலையை கருத்தில் கொண்ட பிறகு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கொரோனா தடுப்புக்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்ற முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, தற்போதுள்ள உத்தரவு வரும் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு உள்துறை அமைச்சகத்தால் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாது.

இருப்பினும், முகக்கவசம் பயன்பாடு, கை சுகாதாரம், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொடர்ந்து வழிகாட்டும்.

தொற்று எண்ணிக்கையில் ஏதேனும் அதிகரிப்ப காணப்பட்டால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அவ்வப்போது சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, விரைவான மற்றும் செயல்திறன்மிக்க நடவடிக்கை எடுப்பதைக் கருத்தில் கொள்ளலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.

You might also like