பரத் – வாணி போஜன் நடிக்கும் த்ரில்லர் படம்!

தமிழ் சினிமாவில் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பரத். சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்.

தற்போது பாலா இயக்கத்தில் உருவாகும் திரில்லர் நடத்தில் நடிகர் பரத் – வாணி போஜன் இணைந்து நடிக்கின்றனர்.

இது பரத் நடிக்கும் 50வது படமாகும். த்ரில்லர் கதைக் களத்தைக் கொண்டு உருவாகும் இந்தப் படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சிறப்பு விருந்தினராக இதில் கலந்து கொண்டார்.

மலையாளத் திரைப்படமான லூசிபர், மரைக்காயர், குரூப் உள்ளிட்ட படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய ஆர்.பி.பாலா இப்படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார்.

த்ரில்லர், காமெடி என எல்லாம் கலந்த திரைப்படமாக உருவாக இருக்கும் இந்தப் படம் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடும் விதமாகவும், பரத் – வாணி போஜன் இருவரும் இணைந்து நடிப்பதால் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும் விதமாக இருக்கும் என்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் ஆர்.பி.பாலா.

ஆர்.பி. பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆ.பி.முத்தையா. மரைக்காயர் படத்திற்கு இசையமைத்த ரான்னி ரபேல் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

– யாழினி சோமு

You might also like