மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் வழிமுறைகள்!

இந்தியாவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதுடன் அவர்களை அதிகம் பாதிப்பது மார்பகப் புற்றுநோய் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுவரை 50 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் அதிகமாக காணப்பட்ட இந்நோய், தற்போது முப்பது வயதிலேயே வருகிறது.

அதிலும் டெல்லி, சென்னை, பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம், புனே போன்ற பெரு நகரங்களை சேர்ந்த பெண்கள்தான் அதிகப்படியாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தகவல்களைத் தந்துள்ளது மருத்துவ ஆராய்ச்சி நிறுவன புள்ளி விவரங்கள்.

புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் புற்றுநோய் நம்மை தாக்காமல் இருக்க, நாம் செய்ய வேண்டியது என்ன, இதற்கான பிரத்தியேகமான பரிசோதனைகள் ஏதேனும் உள்ளனவா என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

காரணங்கள்:

உறவினர்களில், குறிப்பாக தாய் அல்லது சகோதரிக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால் அந்த குடும்பத்து பெண்ணுக்கு இந்தப் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அதேபோல் மிகச் சிறு வயதிலேயே பூப்படைவது, ஏதாவது உடல்நலக் கோளாறுகளுக்காக அதிக அளவில் ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, புகை மற்றும் மதுப்பழக்கம், ரத்த அழுத்தம்,

சர்க்கரை நோய், ஒவ்வாத மேற்கத்திய உணவு பழக்கங்கள், அதிக கொழுப்பு உணவுகள் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களும் மார்பகப் புற்றுநோய்க்கு காரணங்களாக கூறப்படுகின்றன.

தடுக்கும் வழிமுறைகள்:

பெண்கள் மாதம் ஒருமுறையாவது தங்களது மார்புகளை தாங்களாகவே சோதனை செய்து கொள்ளும் ‘சுய மார்பக பரிசோதனை’ அவசியமான ஒன்றாகும்.

பரிசோதனையின்போது, மார்பில் வீக்கம், மார்பகத் தோலில் அதீத சுருக்கம், மார்பகத்தில் ரத்தக்கசிவு போன்ற வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாடவேண்டும்.

அதன்பிறகு, ‘மேமோகிராம்’ என்ற எக்ஸ்ரே டெஸ்ட் ஆனது குறைந்த அளவிலான கதிர் வீச்சின் மூலம் மார்பகத்தில் புதிதாகத் தோன்றும் மாற்றங்களைக் கண்டறிந்து விடும்.

மார்பகத்தில் கட்டிகள் இல்லாவிட்டாலும்கூட, கட்டிகள் வருவதற்கான அறிகுறிகள், கால்சியம் அளவில் மாற்றங்களை இந்த பரிசோதனையானது காட்டிக்கொடுத்துவிடும்.

இதன் மூலம் நோய் வருமுன் கண்டறிந்து சிகிச்சை கொடுக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை ‘மேமோகிராம்’ பரிசோதனையை செய்து கொள்வது அவசியம்.

– நன்றி: மாலை மலர்

12.03.2022  2 : 30 P.M

You might also like