சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தடுக்க நடவடிக்கை!

– சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை

சென்னை நடேசன் சாலையில், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிறுவன், ஆட்டோ மோதியதில் படுகாயம் அடைந்தான். விபத்து நடந்தபோது, வாகனத்தை ஓட்டிய சிறுவனுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடு கோரிய மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கண்ணம்மாள் பிறப்பித்த உத்தரவில், “விபத்து நடக்கும்போது, மனுதாரருக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. அதை, தீர்ப்பாய விசாரணையின் போது அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

எனவே, வாகனம் இயக்குவதற்கு சட்டப்படி தடை உள்ளது. நம் மாநிலத்தில், வயது குறைவானவர்கள் வாகனங்களை ஓட்டுவது அதிகரித்து வருகிறது.

இதனால், அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுகிறது. ‘பைக்’ பந்தயத்தில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். வயது குறைவானவர்கள், வாகனங்கள் ஓட்டுவதைத் தடுக்கும் வகையில், சட்டத்தைக் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்.

இதுபோன்ற விபத்து மீண்டும் நடக்காத வகையில், சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்கள் அதற்கான வழிமுறைகளை கண்டறிவர் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, இழப்பீடு பெற மனுதாரருக்கு உரிமை இல்லை. தீர்ப்பாய உத்தரவில் குறைபாடு இல்லை“ எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

05.03.2022 12 : 30 P.M

You might also like