உக்ரைன் மீது போர் துவக்கிய ரஷ்யா!

– பொருளாதாரம் பாதிக்கும் என உலக நாடுகள் அதிர்ச்சி

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலைத் துவக்கியுள்ளது. அங்குள்ள முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் சப்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் தலைநகரான கியூ மற்றும் கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்க், மைக்கோல், மரியூபோல், ஒடேசா, கார்கிவ் நகரங்களில் பீரங்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.

இந்த போருக்கு யாரும் குறுக்கே வந்தால் வரலாறு காணாத அழிவை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார்.

இரு நாடுகள் இடையே போர் துவங்கியிருப்பதால் உலகப் பொருளாதாரம் பாதிக்கும் என பல நாடுகள் கவலை அடைந்துள்ளன.

போர் துவங்கி இருப்பதை ஐ.நா.,வுக்கான உக்ரைன் தூதர் செர்ஜி கில்சிஸ்டியா உறுதி செய்துள்ளார். “ரஷ்ய அதிபர் எனது நாட்டின் மீது போரை பிரகடனம் செய்திருப்பதாக ரஷ்ய ஐ.நா., தூதர் ஒத்து கொண்டார்.” எனக் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்றைய போர் துவக்கத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்திய பங்குச்சந்தையும் சரிவை சந்தித்துள்ளது.

இதனிடையே, உக்ரைன் மீதான போரை நிறுத்த உலக நாடுகள் உதவிட வேண்டும் என அந்நாட்டு உள்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போரும்  பின்னணியும்

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விரும்புகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்தது.

இதற்கு அமெரிக்கா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தியா உட்பட வெளி நாட்டவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

24.02.2022  12 : 30 P.M

You might also like