கடல் எனும் புவியின் போர்வை!

நாம் வாழுகின்ற இந்தப் புவிக்கோளின் பெரும்பகுதி, நீரால் சூழப்பட்டு இருக்கின்றது.
நிலத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்து, ஏராளமான செய்திகளைத் தெரிந்து கொண்டு உள்ளோம்.

ஆனால், கடல் பற்றி எந்த அளவுக்கு அறிந்து இருக்கின்றோம்?

தமிழில் எத்தனை நூல்கள் வெளிவந்து உள்ளன என்ற சிந்தனையின் விளைவாக,
கடல் பற்றிய செய்திகளைப் படிக்கத் தொடங்கினேன்.

மண்ணில் எத்தனை விந்தைகள் உள்ளனவோ, அதைவிடக் கூடுதலாக ஆழ்கடலுக்கு உள்ளே விந்தைகள் நிறைந்துள்ளன.

கடல்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள், கடலைவிட ஆழமானவை என்றே சொல்லலாம்.

உலக நாடுகளின் மொத்தக் கடற்கரை நீளம் 3,15,000 மைல்கள் (ஏறத்தாழ 5,50,000 கிலோ மீட்டர்) ஆகும். இந்தியாவின் கடற்கரை 7,517கிலோ மீட்டர்கள் நீளம் கொண்டது.
தமிழ்நாட்டின் கடற்கரை 997 கிலோ மீட்டர்கள் நீளம்.

கடலின் எடை

கடலில் உள்ள தண்ணீரின் மொத்த எடை, 1,450,00,00,00,00,000,0000 மெட்ரிக் டன்கள் ஆகும்.

எப்படி வாசிப்பது என்று மலைப்பாக இருக்கின்றதா?

ஆயினும் இது, புவியின் மொத்த எடையில், ஒரு விழுக்காடு கூட இல்லை.
வெறும், 0.022 விழுக்காடுதான்.

என்ன வியப்பாக இருக்கின்றதா?

ஆம்; அதுதான் உண்மை.

உலகின் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு கடல் என்றாலும், அது இந்தப் புவிக்கோளின் மேல்பரப்பு மட்டும்தான்.

பூமியின் குறுக்குவெட்டு நீளம் சுமார் 12,700 கிலோமீட்டர்கள் ஆகும்.

அதன் மேல்பரப்பில், சுமார் ஐந்து முதல் பத்து கிலோ மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே கடல் நீர் இருக்கின்றது.

நிலத்தில் உள்ள கற்கள், பாறைகள், மலைகள், மணலின் எடை, கடல் நீரின் எடையை விடக் கூடுதல் ஆகும்.

எனவே, நாம் நேரில் பார்க்கின்ற கடலின் தோற்றம் நம்மை அச்சுறுத்தினாலும்,
ஒட்டுமொத்த உலகில், கடல் என்பது ஒரு விழுக்காடு கூட இல்லை.

நமது உடலை மூடி உள்ள தோல் போல, இந்த உலகை கடல் மூடிக்கொண்டு இருக்கின்றது. அவ்வளவுதான்.

அதாவது, உட்புறம் நெருப்புக் குழம்பாகக் கொதித்துச் சுழன்றுகொண்டு இருக்கின்ற இந்தப்புவியின் மேற்பரப்பைக் குளிர்விக்கின்ற ஒரு குளிர்விப்பானாகக் கடல் அமைந்து இருக்கின்றது.

எனவே, அதை, புவியின் தோல் என்றே அழைக்கலாம்.

கடலின் வகைகள்

உலகில் ஐந்து பெருங்கடல்கள் உள்ளன என்று நாம் படித்து இருக்கின்றோம்.
அதை, இப்போது ஏழாகப் பகுக்கின்றார்கள்.

வட, தென் அட்லாண்டிக் பெருங்கடல்,
வட, தென் பசிபிக் பெருங்கடல்,
இந்தியப் பெருங்கடல்,
அண்டார்டிக் பெருங்கடல்,
ஆர்டிக் பெருங்கடல்
-என்பவையே அந்த ஏழு பெருங்கடல்கள்.

தமிழ் இலக்கியங்களில், ‘உப்புக்கடல், கரும்பச் சாற்றுக் கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், சுத்தநீர்க் கடல்’ என ஏழு கடல்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

பெருங்கடல்களின் (Ocean) பகுதிகளாக, கடல் (Sea), வளைகுடா (Gulf), விரிகுடா (Bay),
நீரிணை (Strait) போன்றவை விளங்குகின்றன.

எடுத்துக்காட்டாக, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல், தென்சீனக் கடல், பாரசீக வளைகுடா, வங்காள விரிகுடா, பாக் நீரிணை ஆகியவற்றைச் சொல்லலாம்.

நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதியை, தீவு என்று அழைக்கின்றார்கள்.
கடல்களின் உள்ளே அமிழ்ந்து கிடக்கின்ற மலைகளின் உச்சிப்பகுதி, கடலுக்கு மேலே நீட்டிக் கொண்டு இருக்கும். அதுதான், தீவுகள் ஆகும்.

மூன்று புறங்களில் நீரால் சூழப்பட்ட பகுதி, தீபகற்பம் என்று அழைக்கப்படுகின்றது. இந்தியா ஒரு தீபகற்பம்.

பசிபிக் பெருங்கடல்

பசிபிக் பெருங்கடல், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குக் கிழக்கே, அமெரிக்காவுக்கு மேற்கே, இடைப்பட்ட பகுதியில் பரந்து விரிந்து உள்ளது.

உலகில் தற்போது உள்ள அனைத்து நாடுகளின் நிலப்பரப்பையும், பசிபிக் கடலுக்கு உள்ளே வைத்தாலும், அதற்கு மேலும், ஆப்பிரிக்கக் கண்டத்தின் நிலப்பரப்பை வைக்கின்ற அளவுக்கு, பசிபிக் கடல் மிகவும் பிரமாண்டமாக உள்ளது.

சில இடங்களில் பசிபிக் கடலின் அகலம் 16,000 கிலோ மீட்டர்கள் ஆகும்.
ஆயினும், இக்கடலில் தீவுகள் குறைவு; மிகச்சிறிய தீவுகளே உள்ளன.

இந்தப்புவி, கிழக்கு நோக்கிச் சுழல்வதால், காற்று மேற்கு நோக்கி வீசும்.
இடையில் தடுப்புகள் ஏதும் இல்லாததால், பசிபிக் கடலில் காற்றின் வேகம் அதிகம். எனவே, கிழக்கு நோக்கிக் கப்பலைச் செலுத்துவது கடினம்.

தென் பசிபிக் பகுதியில், மிகப்பெரிய அலைகள் உருவாகின்றன. உலகின் பெரும்பாலான சுனாமி தாக்குதல்கள், பசிபிக் பெருங்கடல் பகுதியில்தான் ஏற்படுகின்றன.

அக்கடலுக்கு உள்ளே ஏற்படுகின்ற நில நடுக்கங்களால் பொங்குகின்ற அலைகள், ஜப்பானியக் கடற்கரையைத்தான் தாக்குகின்றன. எனவேதான், கடலின் கோர விளையாட்டுக்கு அடிக்கடி இலக்கு ஆகின்றது ஜப்பான்.

அண்டார்டிகா பகுதியில் இருந்து பிரிந்து வருகின்ற பனிப்பாறைகள்,
பசிபிக் கடலில் மிதந்து கொண்டே பல இடங்களுக்கு நகர்ந்து செல்கின்றன.
ஆனாலும், உருகுவது இல்லை. எட்டு மாதங்கள் வரையிலும் உருகாமல் அப்படியே மிதந்து கொண்டே, நியூசிலாந்து வரையிலும் வருகின்றன.

கடலின் ஆழம்

தரையில் இருந்து கடலுக்கு உள்ளே ஓரிரு மைல்கள் வரை இருக்கும் பகுதியை நாடுகளின் எல்லை என வரையறுத்து இருக்கின்றார்கள்.

இந்தப் பகுதியில் கடலின் ஆழம் சராசரியாக 600 அடி இருக்கலாம். இதற்கு அப்பால்தான், உண்மையான கடலின் ஆழம் தொடங்குகிறது. இதற்கு, ‘காண்டினென்டல் ஷெல்ப்’ என்று பெயர்.

இந்தப் பகுதியிலும், 3 விழுக்காடுதான் கடல் உள்ளது. அதற்குப் பிறகுதான், 97 விழுக்காடு கடல் இருக்கின்றது. இங்கு ஆழம் 13 ஆயிரம் அடியில் இருந்து தொடங்குகின்றது. இந்தப் பகுதியை ‘அபிஸ்’ (Abyss) என்று அழைக்கிறார்கள்.

இதன் உள்ளே, பிரமாண்டமான சமவெளிகள், ஏகப்பட்ட எரிமலைகள், படுகுழிகள், மலைத்தொடர்கள் எல்லாம் இருக்கின்றன.

சூரிய ஒளி, கடலுக்கு உள்ளே 100 அடி ஆழம் வரையிலும்தான் தெளிவாக இருக்கும்.
அதற்குக் கீழே போகப்போக, சூரிய ஒளி மங்கிக்கொண்டே போகும்; கும்மிருட்டுதான்.

கடலுக்கு உள்ளே என்ன இருக்கின்றது? என்ற கேள்வி பல நூற்றாண்டுகளாக மனிதனின் தூக்கத்தைக் கெடுத்தது.

கிரேக்கத் தத்துவமேதை அரிஸ்டாட்டில், ‘கடலுக்கு உள்ளே ஏதோ இருக்கின்றது’ என்று சொன்னதைக் கேட்ட அவரது சீடர் அலெக்சாண்டர் என்பவர், ஒரு கண்ணாடி பலூன் வடிவ‌த்தைச் செய்து, அதற்கு உள்ளே உட்கார்ந்து கொண்டு, கடலுக்கு உள்ளே சிறிது ஆழத்துக்குச் சென்று வந்தார்.

அப்போது அவர் பிரமாண்டமான திமிங்கலத்தைப் பார்த்ததாகச் சொல்லி இருக்கின்றார்.

எந்த ஒரு கருவியின் துணையும் இல்லாமல், மூச்சை அடக்கிக்கொண்டு ஒருவர் 285 அடி ஆழம் வரையிலும் இறங்கி இருக்கின்றார்.

ஒரு கயிறில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு சிலேட்டுப் பலகையைக் கட்டி விட்டார்கள். அந்தப் பலகைகளில் கையெழுத்துப் போட்டுவிட்டு வரச்சொன்னார்கள்.

285 ஆவது சிலேட்டு வரை கையெழுத்துப் போட்டுவிட்டு, சுயநினைவை இழந்து விட்டார்.

இதுதான் மூச்சை அடக்கி, கடலில் நீண்ட நேரம் மூழ்கிய சாதனை.

பிக்கார்ட்

1960 ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிக்கார்ட் என்பவர், நீர்மூழ்கிப் படகு ஒன்றைக் கட்டினார்.

‘ட்ரீஸ்டி’ என்ற அந்தப் படகில் உட்கார்ந்துகொண்டு, செங்குத்தாகக் கடலுக்கு உள்ளே இறங்கினார்.

நான்கு மணி நேரம் தொடர்ந்து இறங்கியும் தரை வந்தபாடில்லை.

‘ஐந்து மைல் ஆழம் இறங்கி விட்டேன். இன்னமும் தரை வரவில்லை’ என்று மேலே தகவல் அனுப்பினார். ஐந்து மணி நேரம் கழித்து ‘தரையைத் தொட்டுவிட்டேன்’ என்று வயர்லெஸ்சில் செய்தி அனுப்பினார்.

பசிபிக் கடலில் அவர் இறங்கிய இடம்தான், ‘மெரியானா ட்ரெஞ்ச்’.

இங்கே கடலின் ஆழம், சுமார் ஆறேமுக்கால் மைல். அதாவது, 35 ஆயிரத்து 808 அடி.
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 29 ஆயிரத்து 28 அடிதான். அதை விட ஆழமான மரியானா ட்ரெஞ்ச் பகுதியில் பிக்கார்ட் சுமார் 20 நிமிடங்கள் இருந்தார்.

இதுவரை, மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கடலின் ஆழத்தில் மிகமிக ஆழமான இடம் இதுவே.

ஆனால், மனிதனால் கடலில் மூழ்கி ஆய்வு செய்யப்பட்ட பகுதி மிகமிக மிகமிக மிகமிகக் குறைவே. அந்த ஆய்வுகளில் கிடைத்த தகவல்களைத்தான் நாம் இதுவரையிலும் அறிந்து இருக்கின்றோம்.

பல நாடுகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
வருங்காலத்தில் புதிய புதிய தகவல்கள் கிடைக்கும்.

2012 மார்ச் 26 ஆம் நாள், டைட்டானிக் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், மெரியானா நீள்வரிப்பள்ளத்துக்குள் தனியே சென்று வந்து உள்ளார்.

அதுகுறித்து நான் எழுதிய, மரியானா படுகுழிக்குள் மனிதர்கள் என்ற கட்டுரை, இதே இணையப்பக்கத்தில் இடம் பெற்று உள்ளது.

ஆழ்கடல் மூழ்கு வீரர்

ஆழ்கடலில் மூழ்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் வீரர்கள், மூழ்கும் ஆழத்துக்கு ஏற்றவாறு, அவர்களது அனுபவம், வேலையைப் பொறுத்து, இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகின்றது.

குறைந்தது எட்டு லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலும் இவர்களுக்கு ஊதியம் கிடைக்கின்றது.

ஆழ்கடலுக்கு உள்ளே எண்ணெய், எரிவாயுக் குழாய்களைப் பதிக்கவும், கண்டங்களுக்கு இடையே கேபிள்களைப் பதிக்கவும், அவற்றைப் பராமரிக்கவும், கடலுக்கு மேலே பாலம் அமைக்கவும், ஆழ்கடல் மூழ்கு வீரர்களின் உதவி தேவைப்படுகின்றது.

கடல் உயிரினச் சூழல் பற்றிய ஆய்வுகளுக்கும் விஞ்ஞானிகள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தற்போது, இந்தியாவில் ஆழ்கடல் மூழ்கு வீரர்கள், சுமார் 800 பேர் உள்ளனர். இவர்கள், பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

இந்தியாவில், ஆழ்கடல் மூழ்கு வீரர்களுக்கான பயிற்சி வசதிகள் கிடையாது. கப்பல் படையில் பணிபுரிகின்ற வீரர்கள், தங்கள் பணிக்காலம் முடிந்ததும், நல்ல சம்பளத்துக்குத் தனியார் ஆழ்கடல் மூழ்கு நிறுவனங்களில் சேர்ந்து விடுகின்றனர்.

ஆழ்கடலில் மூழ்கும் பயிற்சிகளை, ஆஸ்திரேலியா, நார்வே போன்ற நாடுகள் வழங்குகின்றன.

‘பெல் டைவிங்’ எனப்படும் இத்தகைய பயிற்சியைப் பெற, இன்றைய நிலையில், சுமார் எட்டு லட்சம் வரை செலவு ஆகின்றது.

இந்தப் பயிற்சி வகுப்பில் சேர 12 ஆம் வகுப்பில், அறிவியல் பாடத்தில் தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் பெற்று இருந்தால் போதும். நீச்சல் தெரிந்து இருக்க வேண்டும்; ஆங்கில உச்சரிப்பும், நல்ல உடல்கட்டும் தேவை.

ஆழ்கடல் வீரர்கள், பெரும் தண்ணீர் சூழ்ந்த நிலையில், வெளிச்சமே இல்லாத இடத்தில் வேலை பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இவர்களுக்காக, சிறப்பு ஆடை வடிவமைக்கப்பட்டு உள்ளது. அது, ‘டைவிங் பெல்’ என்ற அமைப்புடன் இணைக்கப்பட்டு இருக்கும்.

டைவிங் பெல்லில் இருந்து, ஆழ்கடல் மூழ்கு வீரரின் சிறப்பு ஆடைக்கு உள்ளே இணைக்கப்பட்ட குழாய்கள் மூலம், அவருக்குத் தொடர்ந்து வெதுவெதுப்பான நீரும், காற்றும் அளிக்கப்படும்.

கப்பலின் சாச்சுரேசன் சேம்பர் என்ற பகுதியில் இருந்து, கடலுக்கு உள்ளே இவர்கள் இறக்கப்படுவார்கள்.

ஆழ்கடல் மூழ்கு வீரர்கள் மூச்சு விடும் முறையும் மாறுபட்டு இருக்கின்றது.
அவர்கள் உள்ளே இழுக்கும் மூச்சுக் காற்றில், ஆக்சிஜனும், ஹீலியமும் கலந்து இருக்கும். ஹீலியம், இரத்தத்தில் கரையாது என்பதே இதற்குக் காரணம்.

சாதாரணமாக நாம் காற்றில் சேர்த்துச் சுவாசிக்கும், நைட்ரஜன், ஆழ்கடல் மூழ்கு வீரர்கள் கடலின் அடிப்பகுதிக்கு உள்ளே செல்லும்போது, அங்கே உள்ள கடுமையான அழுத்தத்தால், ரத்தத்தில் இருந்து வெளியேறத் தொடங்கும்.

மிகுந்த வேதனையை ஏற்படுத்தும். சில வேளைகளில் மரணம்கூட நேரலாம்.

எனவே, ஒரு ஆழ்கடல் மூழ்குவீரர் தொடர்ந்து 15-20 நாட்களை ஆழ்கடல் பகுதியில் செலவிட்டபிறகு, அவரது உடல் சாதாரண வெளிப்புற அழுத்தத்துக்குப் பழகுவதற்காக, ‘சாச்சுரேசன் சேம்பரில்’ வைக்கப்படுகின்றார்.

அவர் வெளிப்புற அழுத்தத்துக்கு மெதுவாக மீளும் வகையில் அதில் வசதிகள் செய்யப்பட்டு இருக்கும்.

கடல் எல்லை

1982 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் மன்றம், United Nations Convention on the Law of the Sea என்ற அமைப்பை உருவாக்கியது.

இந்த அமைப்புதான், உலக நாடுகளின் கடல் எல்லைகளை வரையறுத்தது.
இவர்கள் வரைந்த ஒப்பந்தத்தில், இதுவரையிலும், 158 நாடுகள் கையெழுத்து இட்டு உள்ளன.

கடலில், மூன்று வகையான எல்லைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன.

கரையில் இருந்து ஆறு நாட்டிகல் மைல் தொலைவுக்கு உட்பட்டது ‘கரைக்கடல்.’
இதில் கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்கலாம்.

அடுத்த ஆறு நாட்டிகல் மைல், ‘அண்மைக் கடல்.’
இதில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கலாம்.

அதற்கு அப்பால் உள்ளது ‘ஆழிக்கடல்.’
இதில் கப்பல்களில் மீன் பிடிக்கலாம்.

இப்போது கரை ஓரங்களில் மீன்வளம் குறைந்து விட்டது. எனவேதான், கட்டு மர மீனவர்கள், அண்மைக் கடலுக்கும், ஆழிக்கடலுக்கும் செல்லுகின்றார்கள்.

ஒரு நாட்டின் கடல் எல்லையான 12 நாட்டிகல் மைல் என்பது, தோராயமாக 22.2 கிலோ மீட்டர்கள் ஆகும். அந்த எல்லைக்கு உள்ளே, பயணிகள் கப்பல் போகலாம்.

மீன்பிடிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள், வணிகக் கப்பல்கள் செல்வதற்கு, அந்த நாட்டின் கடலோரக் காவல்படையின் ஒப்புதலைப் பெற வேண்டும். மீன்பிடி படகுகளில், மரக்கலங்களில், கப்பல்களில் அந்தந்த நாட்டின் தேசியக் கொடிகள் பறக்க வேண்டும்.

18 ஆம் நூற்றாண்டில் இருந்து 20 ஆம் நூற்றாண்டு வரையிலும், ஒரு நாட்டின் கடல் எல்லை, ஆறு கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருந்தது.

ஏனெனில், அப்போது இருந்த பீரங்கிகள் வீசுகின்ற குண்டுகள், ஆறு கிலோ மீட்டருக்கு மேல் பாயாது. எனவேதான், அத்தகைய கட்டுப்பாடு.

ஆனால், இப்போது, கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகள் வந்து விட்டன. இப்போதும், சிங்கப்பூர், ஜோர்டான் போன்ற நாடுகள், தங்களுடைய கடல் எல்லையை, 6 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலேயே நிறுத்திக் கொண்டு உள்ளன.

கடலோரக் காவல்படையினர், ஒரு நாட்டின் கடல் எல்லைக்கு அப்பால், மேலும்,
22 கிலோ மீட்டர் தொலைவுக்கும் சென்று, கண்காணிப்பு, காவல் பணிகளில் ஈடுபடலாம்.

அதற்கு மேல் ‘பொருளாதார எல்லை’ என்று ஒன்று உள்ளது.

அதன்படி, சுமார் 393 கிலோ மீட்டர் வரையிலும் கடலில் உள்ள எல்லா வளங்களும், அதற்கு அருகில் கரையைக் கொண்டு உள்ள நாட்டுக்கே சொந்தம் ஆகும்.

மீன் பிடிப்பது, பெட்ரோல் எடுப்பது போன்ற உரிமைகளை அந்த நாடு கொண்டு உள்ளது.

(தொடரும்…)

– அருணகிரி (writerarunagiri@gmail.com)

9444393903

You might also like