நாத்திகனானதும், ஆத்திகனானதும் நண்பர்களால்தான்!

நண்பர்களின் பழக்க வழக்கம் நம்மை மாற்றுமா? என்பதற்கு கண்ணதாசன் கொடுத்த பதில்!

***

“யாரோடு, நீ பேசுகிறாயோ அவனுடைய நடத்தையைப் பொறுத்தே உன் புத்தி செயல்படுகிறது.

பன்றியோடு சேரும் கன்றும் சாக்கடையில் புரளும்.

ஏன், வர்ணங்களில் கூட ஒரு மனோதத்துவம் உண்டு.

கறுப்பு வர்ணத்தையே பார்த்துக் கொண்டு இருப்பவனுக்கு கல்மனம். வெள்ளை நிறத்தைப் பார்த்தால் தூய்மை. பச்சை தயாள சிந்தை. மஞ்சள் மங்கலமுடையது.

வாசனையிலும் அந்த பேதம் உண்டு.

நறுமண மலர்களை முகரும் போது உன் மனமும், முகமும் பிரகாசிக்கின்றன. நாற்றத்தை முகரும்போது உனக்கே அருவருப்பு.

அதுவே உனக்குப் பழக்கமாகி விட்டால், உன்னை பார்க்கும் போதெல்லாம் எதிரிகளுக்கு அருவருப்பு. சகவாச தோஷமும் இதுதான்.

நான் பன்னிரண்டு வயதில் தமிழ் வித்துவான் பரீட்சையில் புகுமுக வகுப்பு எழுதினேன். அப்போது அமராவதிபுதூர் குருகுலத்தில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அங்கேயே வித்துவான் பட்டப்படிப்புத் தொடங்கினார்கள்.

அப்போது வித்துவான் பட்டப்படிப்புக்கு இவ்வளவு ஆங்கிலப் படிப்பு வேண்டும் என்ற விதிமுறை இல்லை.

முதல் வருடம் ‘என்ட்ரன்ஸ்’ பாஸ் செய்தேன். அப்போது எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர் இராமநாதபுரம் வித்துவான் ராமசாமி பிள்ளை. அவரது எளிய தோற்றம் என்னைக் கவர்ந்தது. அத்தோடு நான் கிராமத்துக்கு வந்து விட்டேன்.

வித்வான் படிப்பைத் தொடர வேண்டும் போல் தோன்றிற்று. பக்கத்து ஊரான கீழ்ச்செவல் பட்டியில் இருந்த வித்துவான் முத்துகிருஷ்ணன் ஐயரிடம் தினமும் நான்கு மைல்கள் நடந்து போய்த் தமிழ் இலக்கியம் கற்றுக் கொண்டேன். அதையும் முழுமையாக கற்கவில்லை.

குருகுலத்திலும், பிறகு சென்னைக்கு வந்ததும், பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களிடம் தான் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். குருகுலத்தில் நான் படித்தபோது அவர் தான் தலைமை ஆசிரியர். அவர்களிடம் நான் பாடம் கற்றுக் கொண்டேன்; பழகியும் வந்தேன்.

அந்த பழக்கத்தில் தான் எனக்கு பணிவு ஏற்பட்டது. புதுக்கோட்டை, ராயவரத்தில் ஒரு பத்திரிகையில் நான் ஆசிரியராக இருந்த போது, சில நண்பர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. அந்த தொடர்பில்தான் மதுப்பழக்கம் ஆரம்பமாயிற்று.

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் திருமுருக கிருபானந்த வாரியாரின் தொடர்பு ஏற்பட்டது. திடீரென்று அவர் எனக்கு ஒரு நாள் டெலிபோன் செய்து, ஒரு திருக்குளத் திருப்பணிக்காக என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார்.

நான் உடனே ‘சுவாமி நீங்கள் வர வேண்டாம்; நானே வருகிறேன்’ என்று கூறி ஒரு நண்பரிடம் ரூபாய் 5000 கடன் வாங்கிக் கொண்டு நேரே சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்றேன். அவர் காலைத் தொட்டு வணங்கி, அந்த பணத்தைக் கொடுத்தேன்.

பிறகு அவர் சொற்பொழிவுகளைக் கேட்க ஆரம்பித்தேன். அதிலிருந்து என் போக்கே மாறிவிட்டது. 1949-இல் நாத்திக நண்பர்களின் சகவாசத்தால் நாத்திகனானவன். வாரியார் சுவாமிகளின் சகவாசத்தால் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதத் தொடங்கினேன்.

இன்று எனக்கே நான் சிறந்தவனாகக் காட்சி அளிக்கிறேன்.”

– கவியரசர் கண்ணதாசன் அவர்களின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நான்காம் பாகத்தில் இருந்து.

18.02.2022  4 : 30 P.M

You might also like