விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல்: அரசின் முடிவு என்ன?

 – சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,

“தமிழ்நாடு அரசு 2021-22-ம் ஆண்டு வெளியிட்ட வேளாண்துறை கொள்கையில், விவசாயத்துக்கு எந்திரங்களை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

எந்திரங்களுக்கு பயன்படுத்தும் டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருட்களின் விலை தற்போது லிட்டருக்கு நூறு ரூபாய் அளவில் உள்ளது.

ஏற்கனவே விவசாய உற்பத்தி செலவு அதிகரிப்பு, குறைந்த விலைக்கு விளைபொருட்கள் கொள்முதல் ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு எரிபொருள் விலை உயர்வு கூடுதல் சுமையாக உள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயித்தபோதும், அவற்றின் மீது வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரி, உள்ளூர் செஸ் வரி ஆகியவற்றை மாநில அரசு விதிக்கிறது.

பீகார் மாநிலத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.50-க்கு வழங்கப்படுகிறது. இதுபோல கர்நாடகா மாநிலத்திலும் மானியம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதைப் போல, விவசாயிகளுக்கும் மானிய விலையில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து மனு அனுப்பினேன்.

அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என தனது போது நல மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர், “மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களை அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது.

பெட்ரோல், டீசலை மானிய விலையில் வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் தலையிட முடியாது.

இது சம்பந்தமாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்பதால் இதற்கு உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஆகையால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

15.02.2022  5 : 30 P.M

You might also like