புரட்சித் தலைவரும் ரத்தத்தின் ரத்தமான தொண்டர்களும்!

– முனைவர் குமார் ராஜேந்திரன் 

தமிழக அரசியல் வரலாற்றையே மாற்றி அமைத்த அ.தி.மு.க. என்கின்ற மகத்தான இயக்கத்தை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சட்டென்று துவக்கிவிடவில்லை. நீண்ட கால அரசியல் பின்புலம் அவருக்கு இருந்தாலும் அ.தி.மு.க.வை துவக்க வைத்து அதன் அடிநாதமாய் இருந்தவர்கள் அவருடைய ரத்தத்தின் ரத்தமான கழகத் தொண்டர்கள்தான்.

ராமாவரம் தோட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பிந்தைய சிகிச்சையில் புரட்சித் தலைவர் இருந்தபோது அவருக்கு ரத்தம் கொடுத்த தொண்டர்கள் தாம், அதிமுக என்கின்ற பொன்விழா காணும் இயக்கத்திற்கும் தங்கள் ரத்தத்தை அளித்திருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆரின் மொழியில் சொன்னால் அவரும், தொண்டர்களும் வேறு வேறு அல்ல.

அவருடைய பிறந்தநாளையொட்டி (ஜனவரி – 17, 1917) இந்தப் பதிவு.

*

“வாத்தியாரைக் கட்சியை விட்டு நீக்கப் போறாங்களாம்”

எம்.ஜிஆர் ரசிகர்களிடையே நெருப்புப் பொறியைப் போல அன்றைக்குப் பரவியது அந்தச் செய்தி.

காரணம்-அப்போது தி.மு.க அமைச்சராக இருந்த என்.வி.நடராசன் வெளியிட்ட அறிக்கை.

தி.மு.க பொருளாளர் பதவியிலிருந்தும், சாதாரண உறுப்பினர் பதவியிலிருந்தும் தற்காலிகமாக எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்ட அறிக்கை தான் பொறி.

பதினைந்து நாட்களுக்குள் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான பதிலை எம்.ஜி.ஆர். தரத் தவறினால், அவர் தி.மு.க.விலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார் என்றும் எம்.ஜி.ஆரிடம் தெரிவிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியானதுமே தமிழகத்தில் அங்கங்கே எதிர்ப்புத் தெரிவித்தார்கள் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள். குறிப்பாக மதுரையில் தீவிரத்துடன் வெளிப்பட்டது எதிர்ப்பு. கோவை, திருச்சி, சென்னை என்று பல இடங்களிலும் எதிர்ப்புகள்.

எல்லோருமே தி.மு.க.வுக்காக அதுவரை உழைத்த எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கியதை எதிர்த்தார்கள். எம்.ஜி.ஆரை மிகவும் நேசித்த தொண்டர்கள் அப்போது சொன்னார்கள்.

“ தி.மு.க.விலிருந்து எம்.ஜிஆரை நீக்கிவிட்டார்கள். இதன் பலன் அடுத்த தேர்தலில் தெரியும்.. பாருங்கள்”

பத்திரிகையாளர்கள் சூழ்ந்திருந்த நிலையில் சென்னை சத்யா ஸ்டூடியோவில் நிதானமாகச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

“மக்கள் சொல்கிறபடி செய்வேன்”.

இதைத் தொடர்ந்து 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-தேதி தி.மு.க நிர்வாகக்குழுவும், அக்டோபர் 14-ம் தேதியன்று பொதுக்குழுவும் கூடின.

பொதுக்குழுவில் வெளிப்படையாக எம்.ஜி.ஆரை நீக்கும் முடிவைக் கண்டித்துப் பேசியதால் வெளியேற்றப்பட்டவர் இலட்சிய நடிகரான எஸ்.எஸ்.ராஜேந்திரன்.

எம்.ஜி.ஆர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு, தூதுவராக நாஞ்சில் மனோகரன் அனுப்பப்பட்டார். தி.மு.க.வின் ஒற்றுமை குலையத் தான் காரணம் இல்லை என்று சொல்லி வருத்தம் தெரிவிக்க மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்.

அதற்குள் எம்.ஜி.ஆரை ஆதரித்தவர்கள் தி.மு.க.வை விட்டு விலக்கப்பட்டார்கள். கே.ஏ.கே.கிருஷ்ணசாமி விலக்கப்பட்டார்.

இதற்கிடையில் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி இருவரையும் தனித்தனியே சந்தித்து சமரசம் செய்து வைக்க முயன்றார் தந்தை பெரியார். அந்த முயற்சிகள் வீணாயின.

தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் தனக்கு ஆதரவாகத் திரண்டிருந்த நிலையில் அண்ணாவின் பெயரில் கட்சியைத் துவங்கப் போவதாக அறிவித்த எம்.ஜி.ஆர் “அண்ணாவின் கொள்கைகளை கருணாநிதியின் கட்சி கைவிட்டு விட்டதால், அண்ணாவின் கொள்கைகளைப் பரப்புவதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பிப்பதாக ‘அறிவித்தார்.

அந்தத் துவக்கத்திற்கு அவர் தேர்ந்தெடுத்த நாள்- அக்டோபர் 17.

காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலால் தனிக்கட்சியைத் துவக்கியிருக்கிறார் என்றும், வருமானவரி பிரச்சினைக்காகவும் ஆரம்பித்திருக்கிறார் என்றும் தி.மு.க தரப்பில் குற்றம் சாட்டியபோது தெளிவாகச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

“வருமான வரி சம்பந்தமான விவகாரத்திற்கும், புதிய கட்சியின் தோற்றத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

அ.தி.மு.க தொடர்ந்து செயல்படும். கட்சித்தாவலுக்குக் காரணமாக இருக்காது”

இந்த இரண்டு விஷயங்களையும் வெளிப்படையாகச் சொன்ன எம்.ஜி.ஆர் அடுத்துச் சொன்னது முக்கியமானது.

“தி.மு.க அரசையும், ஆட்சியையும் கவிழ்க்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மத்திய அரசு முயன்றால், அதை அ.தி.மு.க கடுமையாக எதிர்க்கும்.

தி.மு.க வை விமர்சித்துப் பல குறைகளைச் சுட்டிக்காட்டி அ.தி.மு.க இயக்கத்தை எம்.ஜி.ஆர் உருவாக்கியிருந்தாலும்,

அந்த நிலையிலும் தி.மு.க தலைமையிலான ஆட்சி கவிழ்ந்துவிட வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இல்லை. உடனடியாக அதைக் கவிழ்த்துத் தான் பலன் பெற வேண்டும் என்கிற குறுகிய எண்ணமும் அவருக்கு இல்லை.

இவ்வளவுக்கும் அ.தி.மு.க தொண்டர்கள் மீது பரவலாகத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆரை ஆதரித்த எதிர்க்கட்சிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. மாணவர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

தி.மு.க,அரசைக் கண்டித்து அ.தி.மு.க.வின் முதல் கூட்டம் திருவல்லிக்கேணியில் நடந்தபோது திரளான கூட்டம்.

அந்தக் கூட்டத்தில் தி.மு.க.விலிருந்து காளிமுத்துவும், முனு ஆதியும் விலகி, அ.தி.மு.,க.வில் சேர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. காளிமுத்துவும், முனு ஆதியும் குமுறலுடன் அந்தக் கூட்டத்தில் பேசினார்கள்.

“எம்.ஜி.ஆரை அரசு தொட்டால் அதை எதிர்த்து மக்கள் புரட்சி செய்வார்கள்” என்று ஆவேசத்துடன் பேசினார் காளிமுத்து.

அ.தி.மு.க துவக்கப்பட்ட இரண்டு வாரத்திற்குள்  ஆறாயிரம் கட்சிக்கிளைகளும், பத்து லட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களும் சேர்ந்திருப்பதாகப் பெருமையுடன் குறிப்பிட்ட அ.தி.மு.க அமைப்பாளரான கே.ஏ.கிருஷ்ணசாமி

“கருணாநிதி எம்.ஜி.ஆருக்கு வழங்கிய ‘புரட்சி நடிகர்’ பட்டத்தை அவர் துறந்துவிட்டார். அதற்குப் பதிலாக மக்களின் ஆதரவுடனும், அனுமதியுடனும் வழங்கப்படும் இந்தப் புதிய பட்டத்தை எம்.ஜி.ஆர் ஏற்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்ட பிறகு மக்களின் பெரும் ஆரவாரத்திற்கிடையே வழங்கப்பட்ட பட்டம். “புரட்சித்தலைவர்”

குமார் ராஜேந்திரன்

முதலில் சென்னை சத்யா ஸ்டூடியோவில் தன்னுடைய கட்சிப் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் 1973-க்குப்பிறகு ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றிக் கட்சிப்பணிகளைக் கவனிக்க ஆரம்பித்தார்.

அந்த இடம் – மருதநாட்டு இளவரசி படத்தில் நடித்தற்காக வி.என்.ஜானகிக்குக் கொடுத்த சம்பளத்தில் வாங்கப்பட்டது. 1987 ஜூன் மாதத்தில் அந்த வீட்டை அ.தி.மு.க இயக்கத்திற்கு மாற்றிக் கொடுத்தார் எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகியம்மாள்.

அந்த அலுவலகம் தான் இன்றைக்கும் அ.தி.மு.க.வின் முகவரியாக இருக்கிறது.

You might also like