மக்கள் திலகத்தின் மறக்க முடியாத நாட்குறிப்பு!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு 55 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் எம்.ஆர்.ராதா நடத்திய துப்பாக்கிச்சூட்டின் பரபரப்பு அவ்வளவு எளிதில் அடங்கி விடவில்லை.

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் ரசிகர்களால் இந்த நாள் மறக்க முடியாத நாளாக மனதில் பதிந்துள்ளது.

1967-ம் ஆண்டு, ஜனவரி 12ம் தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் வீட்டில் துப்பாக்கி சூடு நடந்தது. தான் கொண்டு போயிருந்த துப்பாக்கியில் மூன்று தோட்டாக்களை மட்டுமே நிரப்பியிருந்தார் ராதா.

எம்.ஜி.ஆரை நோக்கி துப்பாக்கியின் விசை அழுத்தப்பட, எம்.ஜி.ஆரின் இடதுகாதை ஒட்டி துப்பாக்கி ரவை துளைத்துக் கொண்டு போனது. பிறகு அதே துப்பாக்கியில் இருந்து தனது நெற்றிப் பொட்டிலும், தோளிலும் இரண்டு குண்டுகள் பாய, ரத்த வெள்ளத்தில் மிதந்தார் எம்.ஆர்.ராதா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர் பிழைத்தனர்.

“என் முகத்துக்கு நேராக குண்டு பாய்ந்துவந்தது. நான் எப்படிப் பிழைத்தேன்?” என தடயவியல் நிபுணர் சந்திரசேகரனிடம் ஆச்சர்யத்தோடு கேட்டார் எம்.ஜி.ஆர்.

ராதா பயன்படுத்திய ரவைகளை தீவிரமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தார் சந்திரசேகரன்.

‘அந்தத் துப்பாக்கி ரவைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டவை. அவற்றை ஒரு டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை டிராயரில் வைத்திருந்தார்.

டிராயரில் இருந்த துப்பாக்கி ரவைகள் ஒன்றுக்கொன்று உருண்டு தேய்ந்ததால், ரவையின் மேல் பிணைக்கப்பட்டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. அதனால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை’ என விளக்கினார்.

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு என்னவெல்லாம் காரணம் என அரசுத் தரப்பு, நீதிமன்றத்தில் தெளிவாகவே எடுத்து வைத்தது. எம்.ஆர்.ராதாவின் வக்கீலாக என்.டி.வானமாமலை ஆஜரானார்.

ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நீண்டநாட்களாக இருந்துவரும் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

தொழிலாளி திரைப்பட சூட்டிங்கின்போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில், எம்.ஜி.ஆர், ‘இந்த பஸ் இனி தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்’ எனப் பேச வேண்டும். ‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்’ என மாற்றிச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

இதனால் கடுப்பான எம்.ஆர்.ராதா, ‘சினிமாவுக்குள்ள உன் கட்சி சின்னத்தைக் கொண்டு வராதே… வெளிய போய் மேடை போட்டு பேசு’ என சண்டை போட்டிருக்கிறார். இதனால் கோபமான எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்த, தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தினார்.

இறுதியில் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேசவைத்தார் சின்னப்பா.

இதுதவிர, காமராஜரைக் கொல்ல சதி செய்யப்படுவதாகவும் ராதா எழுதிய ஒரு கட்டுரை, எம்.ஜி.ஆரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருந்தது. வழக்கு விசாரணையில், எம்.ஆர்.ராதாவை வளரவிடாமல் சினிமா வாய்ப்புகளை எம்.ஜி.ஆர் கெடுத்தார் என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது.

கே.சி.பி. கோபாலகிருஷ்ணன், பி.சந்திரசேகரன் மற்றும் துப்பாக்கி நிபுணர் ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய குழு, வெடிக்கப்பட்ட 3 குண்டுகளும் ராதாவின் துப்பாக்கியில் இருந்து மட்டுமே வெளியேறியது என நிரூபித்தனர்.

இந்தச் சம்பவம் நடந்தபோது அங்கிருந்த தயாரிப்பாளர் வாசு தன்னுடைய சாட்சியத்தில், ‘எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு அதே துப்பாக்கியால் இரண்டு முறை தன்னை சுட்டுக் கொண்டார் ராதா’ என வாக்குமூலம் கொடுத்தார்.

‘எம்.ஜி.ஆர் செல்வாக்குமிக்கவர் என்பதால் வாசுவை மிரட்டி பொய் சொல்ல வைக்கின்றனர்’ என ராதா தரப்பில் வாதம் செய்தாலும், முடிவில் சிறைத்தண்டனைக்கு ஆளானார் ராதா.

நீதிமன்றத்தில் வாதம் நடந்தபோது பல சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்தன.

எம்.ஆர்.ராதா லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் சுட்டார் என அரசுத் தரப்பு வக்கீல் குற்றம் சாட்டிக் கொண்டே போக, ஒருகட்டத்தில் கடுப்பான ராதா, ‘யுவர் ஆனர், வழக்கில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் ராதா சுட்டார் என அரசுத் தரப்பு வக்கீல் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

துப்பாக்கியால் சுட்டதில் நானும் சாகவில்லை. ராமச்சந்திரனும் சாகவில்லை. யாரையும் கொல்லாத ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையா?’ எனக் கேட்க, அதிர்ந்தது நீதிமன்றம்.

துப்பாக்கிச் சூடு வழக்கு மிக விரைவாக நடந்தது. அதே ஆண்டு நவம்பர் 4-ம் தேதியன்று நீதிபதி லட்சுமணன் தீர்ப்பை வாசித்தார்.

‘அரசியல் முன்விரோதம் காரணமாக ராதா தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். பிறகு தன்னைத்தானே இரண்டு முறை சுட்டுக்கொண்டார்.

இதை அரசுத்தரப்பு ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது’ எனக் கூறி, ராதாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து ராதா உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.

மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே தண்டனை காலம் ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவருடைய நன்னடத்தை காரணமாக நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் அவர் விடுதலையானார்.

-ஆ.விஜயானந்த்

நன்றி: ஆனந்த விகடன்

You might also like