முன்களப் பணியாளராக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன்!

 – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 2 டோஸ் தடுப்பூசி போட்டாலும் 3-வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுரையின்படி நாடு முழுவதும் இந்தத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். ஜனவரி மாத இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த பூஸ்டர் தடுப்பூசி முன்களப்பணியாளர், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

60 வயதுக்கு மேற்பட்ட 20.3 லட்சம் பேருக்கும், முன்களப் பணியாளர்கள் 9.78 லட்சம் பேருக்கும், சுகாதார பணியாளர்கள் 5.65 லட்சம் பேருக்கும், மற்றும் முதல் கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

35. 46 லட்சம் பேர் தற்போதைய முன்னுரிமைப்படி பூஸ்டர் தடுப்பூசி போடத் தகுதியானர்வகள். இம்மாத இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு இந்த 3வது பூஸ்டர் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9-ம் தேதி கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை காவிரி மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன்.

அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள்.

தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.

You might also like