பாலியல் குற்றத்துக்கு தூக்கு: மஹாராஷ்டிராவில் அதிரடி!

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு பெண்கள், சிறார்கள் மீதான பாலியல் குற்றங்களுக்குக் கடும் தண்டனை வழங்கும் ‘சக்தி குற்றவியல் சட்ட திருத்த மசோதா’ சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்ததை அடுத்து, மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

இந்த மசோதா, பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க வகை செய்கிறது. அத்துடன் பெண்கள் மீது திராவகம் வீசுவது, சிறார்களுக்குப் பாலியல் கொடுமை செய்வது போன்ற குற்றங்களுக்கான குறைந்தபட்ச தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெண்கள், சிறார்கள் மீதான குற்றங்களை பதிவு செய்த 30 நாட்களுக்குள் விசாரணையை முடிக்கவும் சட்ட திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

‘டிஜிட்டல்’ மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களை விசாரிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.

You might also like