மாமா இருந்தவரை அவருக்கும் சேர்த்துக்கலை…!

“ஒரு படைப்பாளியாக கவிதையும் எழுதுகிறீர்கள். இப்போது ஒரு ஜெர்னலிஸ்டாக பத்திரிகைகான எழுத்தையும் எழுதுகிறீர்கள். இதில் எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது?”

– இது, கவிஞரான பிரத்திஷ் நந்தி ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரான போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி.

அப்போது அவர் ஜெர்னலிசத்தின் மீது மிகுந்த மதிப்புடன் சொன்னார், “கவிதை எழுதுவது வாசிக்கிறவர்கள் மனதில் சில உணர்வுகளை உருவாக்கலாம். ஆனால் ஜெர்னலிசத்தில் இப்போது நான் எழுதுகிற பத்திரிகைக்கான எழுத்து உடனடியாக நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது. அந்த விதத்தில் இந்த ஜெர்னலிச எழுத்து எனக்குப் பிடித்திருக்கிறது”.

அவர் சொன்னதை நிரூபிக்கிற மாதிரியான நல்ல மாற்றத்தை நானும் ஜெர்னலிசத்தில் சந்திக்க நேர்ந்தது.

தமிழகத்தின் முதல் அமைச்சராக ஒன்பதரை ஆண்டுகள் இருந்த காமராஜரின் தாயார் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாகத் தகவல் வந்தது. உடனே மதுரைக்குச் சென்று அங்கிருந்து நெடுமாறனுடன் காரில் விருதுநகருக்குச் சென்றார் காமராஜர்.

வீட்டிற்குள் நுழைந்ததும் படுக்கையில் இருந்த காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் கண் விழித்துப் பார்த்தார். மகனைப் பார்த்ததும் நெகிழ்ந்து கண்ணீர் விட்டார். அருகில் உட்கார்ந்த காமராஜர் அம்மாவிடமும், சகோதரியிடமும் விசாரித்து விட்டுக் கிளம்பினார்.

“அப்போ.. நான் வர்றேன்.. உடம்பை நல்லாப் பார்த்துக்க”

கிளம்பிய போது உலர்ந்த குரலில் சிவகாமி அம்மாள் சொன்னார்,

“ஒரு வாய் சாப்பிட்டுட்டுப் போ”

“வேண்டாம்மா” – என்று முதலில் மறுத்தவர்,

”சரி..சரி.. எடுத்து வைங்க” – அடுக்களைக்குள் சென்று தரையில் உட்கார்ந்தார். அவருடைய சகோதரியின் மகள்கள் உணவு பரிமாறினார்கள். அவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு அம்மாவைப் பார்த்துக் கைகூப்பினார் காமராஜர்.

“அப்போ நான் வரட்டுமா?”

சொந்த வீட்டில் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தாயாரின் இறுதிக்காலத்தில் காமராஜர் சாப்பிட்டதாக எழுதியிருந்தார் எழுத்தாளர் சாவி.

“மரணத்தின் போது இன்னொருவர் பணம் கொடுக்கிறார். பல்லக்குக் கட்டுகிறவர் இலவசமாகக் கட்டித் தருகிறார். வந்தவர்களுக்கு ஒரு வேளை சோறு போட இடமும் இல்லை; பணமும் இல்லை; பத்து வருஷம் ராஜாங்கம் நடத்தினான் மகன்! பெற்ற தாய் வாழ்ந்த கதை இப்படி!” என்று காமராஜரின் தாய் சிவகாமி அம்மாள் மறைந்தபோது எழுதினார் கவிஞர் கண்ணதாசன்.

விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த அந்த எளிய வீட்டை – இந்திரா காந்தியிலிருந்து, லால்பகதூர் சாஸ்திரி வரை பலரும் வந்திருக்கிற வீட்டை அரசுடமை ஆக்கியிருந்தார்கள்.

குமுதத்தில் எழுதுவதற்காக 95-ல் விருதுநகரில் உள்ள காமராஜரின் வீட்டுக்குப் போயிருந்தேன். அருகில் இன்னொரு வாடகை வீட்டில் காமராஜரின் தங்கை நாகம்மாளின் மகளான கமலாதேவி வசிப்பதாகச் சொன்னதும் அங்கு போனேன். மிக எளிய வீடு.

காமராஜர் மறைந்த பிறகு பாரத ரத்னா கொடுக்கப்பட்ட போது அதைப் பெற்றுக் கொண்டவர்கள் நாகம்மாள் குடும்பத்தினர் தான்.

அறுபத்து மூன்று வயதான, காமராஜரின் மருமகளான கமலாதேவி வறுமையில் ஒடுங்கிப் போயிருந்தார்.

கணவர் இறந்துவிட அவருடைய மகன்கள் தீப்பெட்டி ஆபிஸில் ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். மிகக் குறைந்த வருமானம் குடும்பத்தைத் தவிக்க வைத்திருந்தது.

“நாங்க ஏழு பேர் இருக்கோம். சாப்பிடவே கஷ்டமா இருக்குப்பா. கஷ்டம் தாங்காம கலெக்டர் காலில் கூட விழுந்து அழுது கூடக் கேட்டுப் பார்த்துட்டேன். எந்த வேலையும் கிடைக்கலைப்பா..” – எதிரில் இருந்த நாகம்மாளின் குரல் ஏறி இறங்கியது. பெருமூச்சு விட்டார்.

“இப்போ பக்கத்து வீடுகளில் வேலை செய்றேன்.. கூட்டுறேன்.. இந்தா இருக்கு.. பாருப்பா (பக்கத்தில் இருக்கும் காமராஜரின் வீட்டைச் சுட்டிக்காட்டுகிறார்.) எங்க மாமா வீட்டிலே பெருக்கிற வேலையாவது வாங்கிக் கொடுக்கச் சொல்லுப்பா.. உனக்குப் புண்ணியமா இருக்கும்.. அங்கே கூட்டினாலாவது கையில் ஐம்பதோ, நூறோ கூலியாக் கிடைக்குமில்லைப்பா..

நான் அங்கே போய்ப் பெருக்கினா அவமானம்னு சொல்றாங்க.. நம்ம நிலைமை இப்படி இருக்கிறப்போ எங்க மாமா வீட்டைக் கூட்டிப் பெருக்கிறதில என்ன அவமானம் இருக்குப்பா..”

– சொன்னபடி கசிந்து அழுதார் ஒரு முதல்வராக இருந்தவரின் மருமகள். சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

“மாமா இருக்கிற வரை அவருக்கும் சேர்த்துக்கலை.. குடும்பத்துக்கும் சேர்த்துக்கலை.. இப்போ பாருப்பா.. விதவை பென்ஷனுக்கு மனுப் போடுற நிலைமையிலே இருக்கேன்”

– சொல்லும் போது கைகூப்பின காட்சி முள்ளாய் உறுத்தியது.

அடுத்த வாரம் 96, மே மாதத்தில் குமுதத்தில் ‘வீட்டுவேலை செய்யும் காமராஜரின் மருமகள்’ கட்டுரை வெளிவந்தது.

வெளிவந்த மறுவாரத்தில் – முதல்வர் ஜெயலலிதா காமராஜரின் குடும்பத்திற்கு வீடும், வேலை வாய்ப்பும், வங்கியில் 11 லட்சம் ரூபாய் டெபாசிட்டும் பண்ணுவதாக அறிவிப்பு வெளியானது.

அந்தத் தகவலைச் சொல்ல கமலாதேவி வீட்டுக்குப்போனபோது அந்த அம்மையார் நெருங்கி வந்து கையைப் பிடித்துக் கொண்டார். கண்கள் ததும்பின.

கனிந்த பார்வையில் நன்றி சொன்னார் கமலாதேவி அம்மாள்.

#

You might also like