தவறாகப் பயன்படுத்தப்படும் அரசு சின்னங்கள்!

– தடுக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசு தேசிய சின்னத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடக் கோரியும் சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா உயர்நீதிமன்றத்தில் வழக்கு 2014ல் தொடர்ந்திருந்தார்.

முன்னாள் எம்.பி. அன்பரசுவும் மறைந்து விட்டார்; வழக்கு தொடர்ந்த போத்ராவும் மறைந்து விட்டார். ஆனால், வழக்கை போத்ரா மகன் தொடர்ந்து நடத்துகிறார்.

இவ்வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘தேசிய சின்னங்கள் பெயர்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்துவதில் அதிகாரிகளிடம் அக்கறை இல்லை என்பதால் விதிமீறல்கள் ஏராளமாக நடக்கின்றன’ என நீதிபதி தெரிவித்தார். டி.ஜி.பி.யையும் இவ்வழக்கில் சேர்த்தார்.

வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது,

‘அமைச்சர்கள், நீதிபதிகள் அரசு சின்னங்களைப் பயன்படுத்தலாம்; முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.

ஏற்கனவே பதவி வகித்தவர்கள் இப்போதும் அரசு சின்னங்களை பயன்படுத்தினால் அவர்கள் செல்லும் வாகனங்களை போலீசாரால் எப்படி நிறுத்த முடியும்?

இதுபோன்ற செயல்பாடுகளுக்கு கான்ஸ்டபிள் கூட நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை எப்படி அமல்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனையை டி.ஜி.பி. மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் வழங்க வேண்டும்.’ என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 3-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

You might also like