குன்னூர் நஞ்சப்பா சத்திரம் கிராமத்தை தத்தெடுத்த ராணுவம்!

நீலகிரி மாவட்டம், குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில், டிசம்பர் 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

அந்தச் சம்பவத்தின் போது, மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்காக, வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட சென்டர் மற்றும் நஞ்சப்பா சத்திரம் ஆகிய இடங்களில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தென் பிராந்திய ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அருண் தலைமை வகித்து, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியின்போது, ‘உங்களது வேலைக்கு எங்கள் அங்கீகாரம்’ என்ற ராணுவத்தின் பதக்கம், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் ராஜேஷ்வர் சிங், நீலகிரி கலெக்டர் அம்ரித், நீலகிரி எஸ்.பி., ஆசிஷ் ராவத் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தீயணைப்பு அதிகாரி, மருத்துவ குழுவினர், ராணுவ மருத்துவ குழுவினர் உட்பட பலருக்கும் நன்றி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விபத்து ஏற்பட்ட இடத்தை ராணுவ அதிகாரிகள் பார்வையிட்ட பின், மக்களுக்கு போர்வைகள், சோலார் எமர்ஜென்சி விளக்குகள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்குப் பின் பேசிய அவர், “ஹெலிகாப்டர் விபத்தின்போது மீட்புக்காக உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் நான் படித்துள்ளேன். அர்ப்பணிப்பு கொண்ட நீலகிரி மக்கள் மத்தியில், சீருடை அணிந்து சேவை செய்வதில் பெருமைப்படுகிறோம்.

உதவி செய்பவர்கள் கடவுள் போன்றவர்கள். நம் நாட்டில் இதுபோன்ற கிராமம் இருப்பது நமக்கு பெருமை. விபத்தில் சிக்கிய ஒருவர் நம்மிடையே உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம். உடனடியாக தண்ணீர், போர்வை, கம்பளி, முதலுதவி பொருட்கள் வழங்கி உதவியதற்கு எத்தனை நன்றி சொன்னாலும் தீராது.

இந்தக் கிராமத்தை அடுத்த ஆண்டு டிசம்பர் 8 வரை தத்தெடுக்கிறோம். மாதந்தோறும் டாக்டர், செவிலியர் இந்த கிராமத்துக்கு வந்து மருத்துவ முகாம் நடத்துவர். இங்குள்ள 60 குடும்பங்களை சேர்ந்த மக்கள், ராணுவ மருத்துவமனையில் இலவச பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இங்குள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். மீட்புப் பணியில் ஈடுபட்ட தமிழக காவல் துறை, தீயணைப்பு படையினர், மருத்துவக்குழு, மின் வாரியம், வெலிங்டன் ராணுவ மருத்துவமனை, வெலிங்டன் ராணுவ மையம்; வெலிங்டன் ராணுவ கல்லுாரியில் உள்ள அனைவருக்கும் நன்றி. முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கும் நன்றி” எனக் கூறினார்.

You might also like