கோல்டன் குளோப் விருதுக்கு ‘ஜெய்பீம்’ தேர்வு!

சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்ப்பை பெற்றது. காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட ராஜ்கண்ணு என்பவரைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் தயாராகி இருந்தது. இதில் சூர்யா பழங்குடி மக்களுக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார்.

பிரகாஷ்ராஜ், மணிகண்டன், லிஜோமோல் ஆகியோரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜெய்பீம் திரைப்படத்தில் சர்ச்சைக் காட்சிகள் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின.

இந்தத் திரைப்படத்துக்கு விருதுகள் வழங்கக் கூடாது என்று மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எதிர்ப்பு காரணமாக நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது ஜெய் பீம் திரைப்படம் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற இருக்கும் கோல்டன் குளோப் விருது விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நடைபெறும் முக்கியமான திரைப்பட விழாக்களில் கோல்டன் க்ளோப் விழாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் ஜெய்பீம் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில் திரையிடப்படுகிறது.

You might also like