சிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 400% உயர்வு!

கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2020-ல் சிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 400% அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் உள்ள தரவுகளின் அடிப்படையில், “நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, 2020-ம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் பல மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

சிறார்களை வைத்து எடுக்கப்படும் ஆபாசப் படங்களை வெளியிடுதல், ஆன்லைன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட குற்றங்கள் இதில் அடங்கும்.

கடந்த 2019-ம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் தொடர்பாக 164 வழக்குகள் பதிவாகின. இதுவே 2018, 2017-ம் ஆண்டுகளில் முறையே 117, 79 ஆக இருந்தது.

ஆனால், 2020-ம் ஆண்டில் சிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றம் தொடர்பாக 842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது 2019-ம் ஆண்டில் பதிவான வழக்குகளை விட 400 சதவீதம் அதிகமாகும். இவற்றில் 738 வழக்குகள் சிறார் ஆபாசப் படங்களை வெளியிடுதல் தொடர்பானவை.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள குழந்தைகள் உரிமை அமைப்பின் (க்ரை) தலைவர் பூஜா மர்வாஹா,

“கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்றன.

இதனால் கிட்டத்தட்ட பெரும்பாலான சிறார்களுக்கு ஸ்மார்ட் போன்கள் கிடைத்துவிட்டன. அதிக நேரம் ஆன்லைனில் செலவிடுவதால், சில சமயங்களில் ஆபாச இணையதளங்களால் அவர்கள் கவரப்பட வாய்ப்பு உருவானது.

இதுவே இதுதொடர்பான இணையவழி குற்றங்களுக்கு ஆரம்பப் புள்ளி ஆகும். இதனால்தான், 2020-ம் ஆண்டு சிறார்களுக்கு எதிராக அதிக அளவில் இணையவழி குற்றங்கள் அரங்கேறியுள்ளன” எனக் கூறினார்.

You might also like