அடர்ந்த காட்டுக்குள் கை தட்டுவது யார்?

“அடர்ந்த காட்டுக்குள்ளாக
பிர்சா கைதட்டுகிறான்.
பிர்சாவின் கைதட்டலை
மான்கள், யானைகள்,
காட்டெருமைகள் கூட
புரிந்து கொள்ள முடிகிறது.
எனினும் மனிதர்களுக்கு மட்டும்
அது புரிவதே இல்லை…”
– முண்டா பழங்குடியின பாடல்

நமக்கு சொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வரலாறு 1857 ஆம் ஆண்டு தொடங்குகிறது.
ஆனால் இந்திய நிலப்பரப்பில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு இனக்குழுவினர் மற்றும் ஆதிவாசிகள் நடத்திய எழுச்சி மிக்க போராட்டங்கள் வரலாற்றில் பல உள்ளன.

சந்தால் (Santhal) மற்றும் முண்டா (Munda) பழங்குடி மக்களின் போராட்டங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

சோட்டா நாக்பூர் வனப் பகுதியில் ‘பிர்சா முண்டா’வின் தலைமையில் நடைபெற்ற பழங்குடி மக்களின் தீரமிக்க போராட்டங்கள் தனித்து பேச வேண்டியவை.

1875, நவம்பர் 15 இல் ராஞ்சி அருகே மலைக் கிராமமான உலிகாட் எனுமிடத்தில் பிர்சா பிறந்தார்.. குழந்தையில் நோஞ்சானாக இருந்ததாகச் சொல்லி பெற்றோரால் அவரது தாய்மாமனிடம் கொடுத்து வளர்க்கப்பட்டார்.

முண்டா பழங்குடி இனத்தவர்கள் ஆஸ்ட்ரோ-ஆசியாடிக் இனக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தனித்துவமான கலாச்சாரத்தையும், காட்டில் வேட்டையாடி உணவு சேகரித்ததை பகிர்ந்துண்ணும் கூட்டு சமூக வாழ்வியலையும், கூடவே சிறிது பயிர் சாகுபடி தொழிலையும் மேற்கொண்டவர்கள்.

இயல்பில் காட்டின் மரங்கள், பூக்கள், விலங்குகள் பெயர்களையே தங்கள் பெயர்களாக வைத்து கொள்வார்கள்.

சோட்டா நாக்பூர் வனப்பகுதியையும் அவற்றில் பொதிந்திருக்கும் வளங்களையும் கண்ட ஆங்கிலேயக் காலனிய அரசு மெல்ல மெல்ல தமது அதிகாரத்தின் எல்லையை வனத்தை நோக்கி நகர்த்தியது.

ஜமீன்தாரர்கள், உயர் சாதி நிலப்பிரபுக்கள், கந்து வட்டிக்காரர்கள் துணையுடன் பழங்குடியினரின் நிலங்களுக்கு அநியாயமான வரி விதித்ததோடு மெல்ல மெல்ல அவற்றை அபகரிக்கவும் செய்தனர்.

கூடவே வனச் சட்டங்கள் எனும் பெயரில் ஒட்டு மொத்த காட்டையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தங்களது பாரம்பரியமான நிலத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்த முண்டா பழங்குடியினர் காட்டை விட்டு விரட்டப்பட்டு நிர்கதியானதோடு பஞ்சத்தால் பலர் உயிரிழந்த கொடுமைகளும் நடந்தேறியது.

இவ்வாறாக வஞ்சிக்கப்பட்டு குமுறிய முண்டா பழங்குடி மக்களை ஒன்று திரட்டி “எமது வனம், எமது நிலம்”, “பழங்குடிகளாகிய நாமே இதை ஆள்வோம்” என்று பிர்சா தனது பதின் வயதிலேயே நில மீட்பு போராட்டங்களை முன்னெடுத்தார்.

பிர்சாவின் தீர்க்கமான பேச்சும், போர்க்குணமும் கண்டு மக்கள் அவரது பின்னால் இயல்பாக ஒன்று திரண்டனர்.

காலனிய அரசின் நில ஆக்கிரமிப்பிற்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக பழங்குடிகளின் வில், அம்பு முதலான ஆயுதங்களுடன் மரபார்ந்த போர்முறையைக் கொண்டும், காட்டில் மறைந்திருந்து தாக்குதல் தொடுக்கும் முறையையும் பயன்படுத்தி போரிட்ட பிர்சாவின் உத்திகள் ஆங்கிலேயர்களை மிரட்சியில் ஆழ்த்தியது.

இடையே பிர்சாவை கைது செய்து இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைத்ததோடு, பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாக்கியது ஆங்கிலேய அரசு.

பிறகு விடுதலை செய்யப்பட்ட பிர்சா அதே பழைய உத்வேகத்தோடு விடாமல் ஆங்கிலேய காவலாளிகளின் கேந்திரமாக கருதிய குந்தி காவல் நிலையத்தின் மீது தமது படையினரோடு தாக்குதல் தொடுத்தார்.

சமரசமற்ற நில போராட்டத்திற்கு இடையே பழங்குடிகளின் கிறித்துவ மத மாற்றம் தங்களது தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதாகவும் சாடியுள்ளார்.

ஆங்கிலேய அரசுக்கும் அவர்களது விசுவாசிகளான ஜமீன்தாரர்கள், பிற ஆதிக்க வகுப்பினருக்கும் பெரும் சவாலாக திகழ்ந்த பிர்சாவையும் அவரது படையினரையும் தீர்த்துக் கட்ட பல்வேறு முயற்சிகள் எடுத்தும், அவை அனைத்தும் பழங்குடியினரின் உறுதியான ஒற்றுமை மற்றும் தளராத போர்க்குணத்தால் பலனின்றி போயின.

தொடர்ந்து பிர்சாவின் தளபதியாக கருதப்படும் கயா முண்டாவை செய்ல் மலை முகட்டின் எட்கடி எனும் கிராமத்தில் நடந்த கடும் சண்டைக்குப் பின்னர் ஆங்கிலேய அரசு கைது செய்தது.

அப்போதும் முண்டாக்களின் எதிர் தாக்குதலையும், வனம் குறித்த அவர்களின் நுட்பமான அறிவையும் கண்டு அசந்து போன காலனிய அரசு, இவர்களை நடைமுறையில் முழுவதுமாக ஒடுக்க தாக்குதலோடு பல தந்திரங்களையும் கையிலெடுத்தது.

இறுதியாக 1900 ஜூன் 8 ந் தேதி கைது பிர்சா செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
சிறையில் அவர் அருந்தும் தண்ணீரில் நஞ்சு கலக்கப்பட்டு மறுநாள் காலையில் அதனைப் பருகியதால் உயிரிழந்தார்.

ஆனால் அவர் காலராவால் இறந்ததாக ஆங்கிலேய அரசு அறிவித்தது.
மக்கள் எவரும் இதனை நம்பவில்லை.
இறந்தபோது அவரது வயது 25.

முண்டாக்களையும் கடந்து இதர பழங்குடி இன மக்கள் யாவரும், அவர் காட்டில் அலைந்து திரிந்த மரங்கள், ஓடைகள், மலைகள் என அனைத்திலும் அவரது ஆன்மா உள்ளதென பாடுகிறார்கள். அவ்வளவு தீர்க்கமாக..

ஜல் ஹமாரே (நீர் நமது)
ஜமீன் ஹமாரே (நிலம் நமது)
ஜங்கில் ஹமாரே (வனம் நமது)

பிர்சா துவங்கிய போர் இன்றும் முடிவடையாமல் தொடர்கிறது..

நவம்பர் 15, பிர்சா முண்டாவின் பிறந்த தினம்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like